நீ செய்ததில் நியாயம் எங்கனம் !

உணர்வுகளில் கனன்ற தணலால்,உன்
உடலை எரித்தாயோ!
வஞ்சம் தீர்க்கப்படும் மூவுயிர்க்காய்,உனை
முழுதாய் அழித்தாயோ!
இனம் என்ற உணர்வுக்காய், இன்று
இறுதி மூச்சையும் விட்டாயோ!

உன்னை வணங்குகிறேன் சகோதரி
உன் உணர்வுகளை மதிக்கிறேன் -ஆனால்
நீ செய்ததில் நியாயம் எங்கனம்,
உயிர் கொலையை எதிர்த்து
உன் உடலை கொளுத்த
எப்படி முடிந்தது உனக்கு?
இன்று, நீ செய்தது கூட
ஒரு உயிர்கொலை ஆகிவிட்டதே!


தீயிலும் வலிய உன்குரலை
தீயால் அழித்துக்கொண்டதேன்!
உணர்வு உள்ளவர்கள்
நிச்சயமாய்
உணர்ந்து எழுவார்கள்;
உன் உடலை எரித்தால் தான்
உணர்ச்சி வருமென்றால்
அவர்கள் பிணங்கள்,
அது தேவையில்லை!

இன்று, முத்துக்குமாரை
முன்னுதாரணமாய்
கொண்டாய் நீ , நாளை
உன்னை யாரும்
முன்மொழியக்கூடாது.

முத்துக்குமார்களும்,
செங்கொடிகளும் எமக்கு வேண்டும்
உணர்ச்சிவசப்படும் முன்மாதிரிகளாய் அல்ல
எமை முன்னின்று வழிநடத்துபவர்களாய்!!

என் கண்ணீர் துளிகளை உனக்கு அஞ்சலியாக்குகிறேன்.  உன் நோக்கம் நிறைவேற, உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

உறவுகளே! என்ன செய்யப் போகிறோம்!!

செய்தி கேட்டபின் என்னால் சகயமாக இயங்க  முடியவில்லை. நேற்று இரவு இதன் தாக்கத்தை உணர்ந்தேன்.  விழிகளை மூடும் போதும் அம் மூன்று உருவங்களும் கண்முன்னே வந்து விரிகிறது. அவர்களை பெற்றவர்களும், அவர்கள் உறவுகளும் விடும் கண்ணீர் என் மனதையும் வந்து நனைத்து கனக்க வைக்கிறது. 

நாள்  குறித்து தன்மகனை பலிகொடுப்பதென்பது  ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விடயம் என்று உணரமுடியாத அளவுக்கு நான் ஒன்று மரத்துப்போய்விடவில்லை. 

ஒருவேளை, முசோலினி வாரிசுகளுக்கு அந்த தேவை இருக்காலம். கூடவே  ஆசனங்களை  தக்கவைக்க அந்த வாரிசுகளின் கால்பிடித்து இயங்கும் எடுபிடிகளுக்கும்  இது சரியாக படலாம்.   ஆனால், ஒரு தாயாக அம்மையாருக்கும், மகவுகளை  கொண்ட அவர்தம் எடுபிடிகளுக்கும்  புரியாமல் போனது எங்கனம்? 

ஆயிரக்கணக்கில் மக்கள் சாக காரணமான அன்டர்சனை    தப்பிக்கவைத்த குற்றத்துக்காக,  இன்று தந்தைக்காக தனையன் தூக்கு கயிற்றில் ஏறட்டும். அப்பொழுதாவது புத்திர சோகம் என்னவென்று புரியுதா பார்க்கலாம் இந்தப்பெண்மணிக்கு .  


நாளை ஒரு பொழுதிலே, ஆட்சிகள் மாறிய தருணத்திலே , இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டால், இழந்து போன உயிரை மீட்டு கொடுப்பார்களா? இல்லை பாலைவனமாகி போல இருபத்தியொரு வருடங்களையும் பின்னோக்கி நகர்த்துவார்களா? 


ஈழத்தமிழனாக  இந்த நொடியும் நம்புகிறேன்; ஆறுகோடி  தமிழர்களும் அந்த அப்பாவி உயிர்களை ஒரு போதும் தூக்கு கயிற்றுக்கு முன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று.. 

நான் என்ன செய்வேன்!  நாதியற்ற இனத்திலல்லவா பிறந்துவிட்டேன். ஆனால், "நான் நாமானால்"  நம்மால் முடியாதது  எதுவுமில்லை.

உறவுகளே  என்ன செய்யப்போகிறோம்!

காந்தியும் திலீபனும் பெருமைப்படுத்தியதை சிறுமைப்படுத்தும் சில ...

அகிம்சை, சத்தியாக்கிரகம்- உண்ணாவிரதம் என்ற வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் என் நினைவில் வருபவர்கள் இருவர்.  ஒருவர் மோகன்தாஸ் கரம் சாந்த் காந்தி  என்ற மகாத்மா காந்தி.  மற்றவர்  பார்த்தீபன் ராசையா  என்ற  திலீபன்.

எமது பாடசாலை, சமூகக்கல்வியும் வரலாறும் என்ற பாட புத்தகத்தில் சத்தியாக்கிரகம்- மகாத்மா காந்தி பற்றிய விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறுவயசிலே அவரைபற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.  அத்துடன்,   மகாத்மா காந்தி என்ற பெயரை அறியாதவர்கள்  இருக்கமாட்டார். பெயரை கேட்டாலே போதும், அவர் உருவம் கண் முன்னே வந்து நிற்கும்.


ஆனால், இலங்கை  இந்திய அரசுகளிடம் ஐந்து அம்ச  கோரிக்கைகளை முன்வைத்து,  உண்ணாவிரதம் என்ற தன்னை உருக்கி போராடும் வழியை கையில் எடுத்து, கொள்கைக்காக தனது  இருபத்தி நான்காவது வயசிலே உயிரை நீத்த திலீபன் பற்றி அநேகர் அறிந்திருந்தாலும், இன்னும் அவரின் அந்த தியாகம் பற்றிய  முழுமையான புரிதல் நம்மவர்கள்  பலரிடம் இல்லை என்பதுவே உண்மை.  ஏன், அவர் முன் வைத்த ஐந்து அம்ச கோரிக்கையை யாரிடமாவது கேட்டுபாருங்கள்?
 

ஆனாலும், இது எம் தவறு இல்லை. அவர் பெயரை பொதுவில் புகழ்ந்தாலே நாளை புகழ்ந்தவர் இருப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை என்பதே உண்மை.  சிலைக்கே உரிமை இல்லையாம் அப்புறம் எப்படி ....!
நேற்று  வெள்ளை தோல் தரித்த அடக்குமுறையாளர்களால்  தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டவர்களே, இன்று தியாகிகளாக மக்களால் பூசிக்க படுகிறார்கள். அந்த வகையில் வரலாறு  திலீபனின்  பெயரை சரியா பதிவு  செய்து  கொள்ளும். ***

ஆனால்,  இப்பவெல்லாம் இந்த உண்ணாவிரதம் என்ற சொல்லை கேட்டாலே மேற் சொன்ன இருவரையும்  மிஞ்சும்  வகையில் என் மனக்கண்ணில் வந்து நிற்பவர்கள் மேலும் இருவர்.

ஒருவர், கலைஞர், இன தலைவர்  என்று போற்றி புகழப்படும் கருணாநிதி, மற்றவர் சிறுத்தை தலைவர் தொல். திருமாவளவன்.
இவர்களின்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரத போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு உங்களை கண் கலங்க வைக்க நான் விரும்பவில்லை. அதே போல  சத்தியமாக மேற் சொன்ன இருவரை  திட்டவும்  இப்போ நான் முன் வரவில்லை. ஏனெனில், இப்பவெல்லாம் கலைஞரை திட்டுவதேன்பது  சும்மா சிவனே எண்டு இருக்கிற  சுவர் மீது தலையை கொண்டு போய் முட்டுவதுக்கு  ஒப்பானது... 
'விடுதலை சிறுத்தை' என்ற பெயரை கேட்டாலே அண்ணர் திருமா சும்மா மீசையை முறுக்கிக்கொண்டு கம்பீரமாக நிற்கும் காட்சி தான் கண் முன்னே வரும் - அது முன்னர்.  இப்ப அண்ணன் பெயரை கேட்டாலே,  எவரை வாய்கிழிய திட்டினாரோ அவர் முன் போய் பொன்னாடை போர்த்தி, அடங்கி கைகட்டி, பல்லிளித்து, வழிஞ்சுகொண்டு நின்ற காட்சி தான் நினைவுக்கு வரும்.  சிங்கத்தை  அசிங்கமாக்கிய  பெருமை  அவர் தலைவர் கலைஞருக்கு தான்.

பொதுவில் ஒரு கொள்கையை முன்வைத்து அது வெற்றிபெறும் வரை,  எதிரிக்கோ இல்லை பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்களுக்கோ   எந்த வித இடையூறும்- சேதாரமும் ஏற்படுத்தாமல்,  ஆகாரம்  தவிர்த்து  தன்னை தானே  வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் தான் அறவழி போராட்டத்தில் உண்ணாநிலை போராட்டம்  என்று  நான் அறிந்துள்ளேன். (சரி தானே!)  

ஆனால் இன்று அதன் நிலை?

ஒரு தலைவனோ அரசியல்வாதியோ "சாகும் வரை உண்ணாநிலை" போராட்டம் என்று தான் கிளம்புவார்கள். கிளம்பிய சில மணி நேரங்களிலே ஐந்து  பஸ் கொளுத்தப்படும், பத்து கடைகள் அடித்து நொறுக்கப்படும்.  காரணம் "நம்ம  தலைவன் உண்ணாவிரதம் இருக்கிறான்டா".


ஆனால்,  குறித்த அகிம்சாமூர்த்தி கிளம்பும் போதே மக்களால் ஊகித்து கொள்ள முடியும், இவன்  போராட்டம் நாலு நாளுக்கு மேல தொடராது என்று.. அந்த கணிப்பு போலவே   நாலாவது நாள் குறித்த அகிம்சைவாதி "என் சேவை இன்னும் மக்களுக்கு தேவை" என்று  ஒரு பஞ்ச் அடித்துவிட்டு, அண்ணன் டாக்குத்தர் ராமதாசோ, இல்லை அவருக்கு ஒப்பான ஒருவரோ  யூஸ் கொடுக்க, இனிதே தனது வரலாற்று சிறப்பு மிக்க அறவழி போராட்டத்தை முடித்துக்கொள்வார்.   


 உடனே அங்கிருந்த அடிப்பொடிகள் 'அண்ணன் வாழ்க, தலைவன் வாழ்க, நாளைய முதல்வன் வாழ்க, நாளைய பிரதமர் வாழ்க' என்ற வரைக்கும் கூவி தம் விசுவாசத்தை காட்டி கொள்வார்கள். ஏனெண்டால், அந்த அடிப்பொடிகளில் ஒருவன் தான் அடுத்த தலைவன் /அரசியல்வாதி!! -
இன்று இதுக்கு பெயர் தான் "சாகும்வரையான  உண்ணாவிரதம்"
இந்த வகையில் அறவழி போராட்டத்தின் வீரியத்தை குறைத்ததும், உண்ணாநிலை போராட்டம் என்றாலே நாலு நாள் சாப்பிடாம இருக்கிறது தான் என்ற சாதாரண மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்திய பெருமையும்  இந்த  வியாபார அரசியல்வா(வியா)திகளையே சாரும்.

மோசமான தோல்வியை பதிவு செய்துகொண்ட இந்திய அணி.

 1974ம் ஆண்டுக்கு பின்னர் முப்பத்தேழு வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் முழுமையாக ஒரு தொடரை இழந்து வெறும் கையேடு மீண்டுள்ளது இந்திய அணி. நிச்சயமாக இது இந்திய  அணியின் டெஸ்ட் வரலாற்றிலும், டோனியின் தலைமைக்கும்  கரும்புள்ளியே.  டெஸ்ட் தரப்படுத்தலில் நம்பர் 1 இடத்தில் இருந்த அணி இவ்வாறு முழுமையாக ஒரு தொடரை இழப்பது என்பது மிகவும் அவமானகரமானது.  

இறுதியாக 2007 ம் ஆண்டு ராவிட்  தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகவே விளையாடி 1 -0 என்ற ரீதியில் தொடரையும்  கைப்பற்றி இருந்தது. 


ஆனால், உலகக்கிண்ணம், ipl ,மேற்கிந்திய தொடர் என்று தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து, இது வரை எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காத கேப்டன் என்ற புகழோடு வலம்வந்த டோனிக்கு இது கடுமையான நேரம்.
 

இந்த வருடத்தில் உலகக்கிண்ணம், ipl , மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்   என்று குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியான போட்டிகள்  வீரர்களுக்கு ஏற்ப்படுத்திய அயர்ச்சி, பயிற்சிகள் மேற்கொள்ள போதிய கால அவகாசம் இன்மை என்றும் அணி சற்றே நலிவடைந்து தான் இருந்தது. அத்துடன், தொடர் தொடங்க முன்னமே சேவாக்கின் இழப்பு..(!) பேசப்பட்டது.

அதன் பின்னர், முதலாவது போட்டியிலே முன்னணி வீரர்கள்  காயம் அடைய ஆரம்பத்திலே அணி குழம்பிவிட்டது. ஆனாலும், இதனால் தான் இந்த தோல்வி என்று சொல்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அத்தனை தோல்விகளும் மிக மோசமானவை. அதிலும் இறுதி இரண்டு போட்டிகளிலும் நம்பர் வன் அணி பெற்ற  இனின்ஸ் தோல்வி! 

முக்கியமாக, சகீர்கானின் இடத்தை நிரப்ப எந்த பந்து வீச்சாளராலும் இயலவில்லை. இரண்டாவது போட்டியில் முதலாவது இனிங்சை தவிர மற்றைய போட்டிகளில் எல்லாம் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் இமாலய இலக்கை சாதாரணமாக தொட்டார்கள். போதா குறைக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் சகலதுறை ஆட்டக்காரர்களை போல செயற்ப்பட்டார்கள். 
ஆனால் இந்தியாவின் துடுப்பாட்டமோ  மோசம்.  உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியால் எந்த இனிங்சிலுமே  முன்னூறு ஓட்டங்களை கடக்க முடியவில்லை.
 
                                                                         ( IND vs ENG )
அத்துடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்திய பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான சூழலை ஏற்ப்படுத்தி கொடுக்கவில்லை. அதாவது இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தாதன் மூலம் இமாலய இலக்குக்களை எட்டி பிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்தி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை அதிகமாக்கிவிட்டார்கள். 

இந்த தொடரை பொறுத்தவரை தனது முழுமையான பங்களிப்பை இந்திய அணி சார்பாக வழங்கியவர் என்றால் அது ராகுல் ராவிட் என்ற தனி நபர் மட்டுமே. நான்கு தொடர்களில் மூன்று சத்தங்கள் உட்பட 461 ஓட்டங்கள். ஒவ்வொரு போட்டியிலும்  இவர் துடுப்பாட்டம் செய்த விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. அதுவும் இறுதி போட்டியில்  முதல் இனிங்சில் ஆரம்ப வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் நின்றார், அந்த இனிங்சில்  ராவிட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க யாராலும் முடியவில்லை. அதுவும் போட்டி இங்கிலாந்து வசமாக காரணமாக அமைந்துவிட்டது. ஒருவேளை இந்த தொடரை இந்தியா வென்றிருந்தாலோ(!) இல்லை தொடர் சமநிலையில் முடிவடைந்தாலோ ராவிட்டின் ஆட்டம் பெரிதும் பேசப்பட்டிருக்கும். இந்திய அணியை பொறுத்தவரை ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டிய விடயம் ராவிட்டின் ஆட்டம் ஒன்று தான்.

இந்த தொடரிலே மேலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட வீரர் சச்சின். அவரின் நூறாவது சத்தத்தை ரசிகர்கள் ஆவலாக  எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஏமாற்றிவிட்டார். இறுதி போட்டியிலே இரண்டாவது இனிங்சில் அதை கடப்பார் என்று எதிர்பார்ப்புக்கள் இருந்த போது 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது கடவுளின் சதியா?  ஏற்கனவே  நான்காவது நாள் ஆட்டத்திலே ஸ்வானின் பந்து வீச்சில் விக்கெட்காப்பாளர் பிரியர் ஸ்டம் செய்தது அவுட்டாக இருந்திருக்கலாம். ஆனால் பிரியர் அம்பயரிடம் முறையிட தவறிவிட்டார். ஒரு வேளை அம்பயர் தர தவறினாலும் ரிவியூ முறைமூலம் மீள்பரிசீலனை செய்திருக்கலாம்.  வீரர்களின் சிறு கவனயீனம், இங்கிலாந்தின் வெற்றி சற்று தள்ளி போய்விட்டது.  

மூன்று தோல்விகளின் பின்னர் நான்காவது போட்டியை சமநிலையில் முடிக்க வேண்டும் என்ற முனைப்புடனே இந்தியா களமிறங்கியது. (வெற்றி என்பது ?) இருந்தும்  வழமை போலவே முதல் இனிங்சில்  இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இடையிலே மழைவந்து இந்திய அணிக்கு உதவி செய்ய நினைத்தாலும் இந்திய அணி அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து முதலாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி  துடுப்பாட்ட  வரிசை சர்வ சாதாரணமாக சரிந்தது. ஒரு பக்கத்தில் ராவிட் தூண் போல நின்றாலும், மறு பக்கம் கைகொடுக்க யாரும் இல்லை.  இறுதியில் அமித் மிஸ்ராவின் உதவியுடன் முன்னூறு ஓட்டங்களை தொட்டு ஆட்டமிழந்தார்கள். 

பாலோ ஒன் ஆகி தொடர்ந்து துடுப்பெடுத்தாட மீண்டும் களமிறங்கிய இந்திய அணிக்கு இம்முறை சச்சினும் மிஸ்ராவும் கை கொடுக்க ஏனைய வீரர்கள் நழுவிக்கொண்டார்கள்.   அதன் மூலம் வரலாற்றை புதுப்பித்துக்கொண்டது இந்திய அணி. தொடர் ஆரம்பிக்க முன்னர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தவர்கள் தொடர் முடிவில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெறும் இருபது மாசங்களுடன் நம்பர் வன் என்ற தகுதி கலைந்தது.

இந்த தொடர் முழுவதிலும்  சுரேஷ் ரைனா,  VVS லக்ஸ்மன் என்று இருவர் இந்திய அணி சார்பாக துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி இருந்தார்களாம். யாராவது கண்டீர்களா?

இனி சிறு இடைவெளியில் தொடங்கவிருக்கும் ஒருநாள் தொடரிலாவது இந்திய அணி சாதிக்க வேண்டும். இல்லையெனில் அணி நாடு திரும்பும் போது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  ரொம்ப  நல்லவங்க. 

ஆனால் ஒருநாள் தொடரிலும் அணி நலிவடைந்துவிட்டது. சேவாக் ,காம்பர், யுவராஜ், சகீர்கான் ஹர்பஜன், இசாந்த் சர்மா போன்ற முன்னிலை வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளார்கள். சிறந்த போர்மில் இருக்கும் ராவிட் ஒருநாள் அணிக்கு மீள திரும்பியுள்ளது சற்று ஆறுதல், அனேகமாக ராவிட்டின் இறுதி போட்டியாக கூட இது இருக்கலாம். அந்தவகையில் அவருக்கு இது முக்கியமானது.
சச்சின் இந்த தொடரிலாவது  நூற்றுக்கு நூறு என்ற மைல் கல்லை எட்டுவாரா? இரண்டு சத்தங்கள் அடித்தால் ஒருநாள் தொடரிலும் ஐம்பது சதங்களை எட்ட கூடிய வாய்ப்பு உள்ளது. எனினும் நூறாவது சத்தத்தை எட்டி பிடிப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். மற்றும்படி சுரேஷ் ரைனாவின் நிலையும் அணியின் பந்துவீச்சும் கவலைக்கிடமாகவே உள்ளது. இழந்த மானத்தை மீட்டெடுக்க இந்த ஒருநாள் தொடரிலாவது மிக பெரிய வெற்றி பெறவேண்டும்.
சாதிப்பார்களா இல்லை மீண்டும் ரசிகர்களை சோதிப்பார்களா?

இந்த படுகொலைகளை தடுத்து நிறுத்துங்கள்!

1984ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட போது இலங்கை தமிழர்கள் தம் பகுதிகளில் கருப்பு கொடிகள் பறக்க விட்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தியதாக வீடுகளில் கதைக்கும் போது கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ராஜீவ் காந்தியின் மரணம் ஈழ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் அனுதாபத்தை கொடுத்திருக்கவில்லை என்பதை உறுதியாக சொல்லமுடியும். காரணம், அவரும் அவர் தம் கட்சியும் ஈழ தமிழர்களுக்கு வழங்கிய கசப்பான அனுபவங்கள் அப்படியானவை..! 

ஒரு வேளை புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றால் மத்திய அரசு (காங்கிரஸ் கட்சி)  கடைசி வரை ஈழ தமிழர்களுக்கு-அவர்களின்  விடுதலைக்கு ஆதரவாக இருந்திருக்கும் என்று யாராவது கூறினால் அதை நினைத்து  பரிதாப்படுகிறேன்.  
ஆனால், ராஜீவின் கொலை பல்வேறு வழிகளில் தமிழர்களின் உரிமை போராட்டத்தை முடக்க ஒரு காரணமாக இருந்துவந்துள்ளது.  அதுமட்டுமல்லாது இதை காரணமாக வைத்து இலட்சகணக்கான அப்பாவி தமிழ் மக்கள் பழி வாங்கப்பட்டுள்ளார்கள். இவ்வளவு வன்மமும்  சம்மந்தப்பட்ட தரப்புக்கு போதாதா?

1991 ஆம் ஆண்டு  ஸ்ரீ பெரும்புத்தூரின் நடந்த தற்கொலை தாக்குதலில் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார்.  தற்கொலை சூத்திரதாரி தனு என்ற பெண்!  இந்த  பெண்ணுக்கு எங்கிருந்து இந்த வைராக்கியம்?    "இந்திய அமைதிகாக்கும் படைகளால் தன் இரண்டு சகோதரர்களை இழந்திருந்தார். அதோடு அந்த படைகளால் வன்புணர்வுக்கும் ஆளாகியிருந்தார். அதனால் தான்  காரணமானவர்களை  பழிவாங்க வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் இருந்துவந்தது"  என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில்  ஒருவரான முருகன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.


அந்த தற்கொலை தாக்குதலை வழிநடத்தியவர்களான  சிவராசன், சுபா மற்றும் சிலரும் இந்தியாவிலே போலீஸ் மற்றும் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் சயனேட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள்.  அதன் பின்னர்  இதனுடன் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்ற போர்வையில் பலர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணைகளின் பின்னர் முருகன், சாந்தன்,  பேரறிவாளன், நளினி என்ற நால்வர் மீது கடுமையானா குற்றச்சாட்டுக்கள்(!) முன்வைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினி என்ற பெண்ணுக்கு மாத்திரம் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இதில் கொடுமையான  விடயம் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முழுமையாக பூர்த்தி செய்யும் முன்னரே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.  அதை தொடர்ந்தும் இருபது வருடங்களாக விசாரணை என்ற பெயரில் எதோ நடந்து வருகிறது.

முக்கியமாக ராஜீவ் காந்தி கொலை புலிகளால் தான் நடத்தப்பட்டது என்பதற்கு கூட இன்னமும் முழுமையான ஆதாரங்கள் விசாரணை செய்யும்  தரப்பால் முன்வைக்கப்படவில்லை. அதோடு விசாரணை "புலிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள்" என்ற கோணத்தில் மட்டுமே இதுவரை நடந்து வந்துள்ளது.
ஆனால் இந்த வழக்கிலே அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் ஏராளம். 
முக்கியமான கேள்வி 'ராஜீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவரின் கட்சி உறுப்பினர்கள் எங்கே போனார்கள்.' அவருக்கு அருகில் இருக்க வேண்டியவர்கள் அந்த நேரத்தில் மாத்திரம் விட்டு தூர விலகியது தற்செயலானதா? என்பது உட்ப்பட பல்வேறு  விடை தெரியாத கேள்விகள் தெக்கு நிற்கிறது! அதற்காக இது புலிகளால் செய்யப்படவில்லை என்று நான் உறுதிப்படுத்த  வரவில்லை. ஆனால் இதனுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு தரப்பு திட்டமிட்டு  பாதுகாக்கப்பட்டுள்ளது.  

ஆனால் இன்று குற்றவாளிகள் என்ற பெயரில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்கள் அந்த கொலையுடன் எந்த மட்டிலும் நேரடியாக சம்மந்தபடாதவர்கள். முருகனை பொறுத்தவரை நடப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார் என்பதை விட கொலையில் அவருக்கு வேறு பங்கு இருந்திருக்கவில்லை.  ஆனால்,  மிகுதி  இருவரான சாந்தன், பேரறிவாளன் மீது சாட்டப்பட்ட  குற்றச்சாட்டுக்கள்  சிறுபிள்ளை தனத்தின்  உச்சம்.

எம்மை விட,  முப்பது வருடங்களுக்கு மேலாக  புலிகளை எதோ ஒருவிதத்தில் பின்தொடரும்-புலனாய்வு செய்துகொண்டிருக்கும் இந்திய புலனாய்வுத்துறைக்கு தெரியும், புலிகள்  தங்கள் நடவடிக்கைகளில் எந்த மட்டில் ரகசியம்காப்பார்கள் என்று... 
அப்படி இருக்க, கொலை நடக்கபோவது பற்றி அறியாது, பேட்டரி  வாங்கி  கொடுத்ததுக்கும், அருகில் நின்று கதைத்ததுக்கும் தீர்ப்பு மரண தண்டனையா..! 

நிச்சயமாக இந்த தண்டனை என்பது ஆளும் வர்க்கத்தை திருப்திபடுத்த, இல்லை அவர்களின் செய்யும் மட்டமான அரசியலுக்காகவே வழங்கப்பட்டது.

சரி, இவ்வாறான ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்று அறியாது, பேட்டரி  வாங்கி  கொடுத்தது கொலைக்கு ஒப்பான, மரண தண்டனை வழங்கக்கூடிய அளவுக்கு கொடூரமான குற்றம் என்றால், கொத்து கொத்தாக ஈழத்தில் மக்கள் சாக குண்டுகள் கொடை செய்த அன்னை சோனியா  கும்பலுக்கு  உச்ச பட்சமாக வழங்கப்பட வேண்டிய  தண்டனை என்ன? வழங்குவது யார்??

தண்டனைகள் என்பது குற்றம் செய்தவர்கள் உணர்ந்து திருந்துவதற்காக வழங்கப்படுவது என்பார்களே  அது பொய்யா?  இருபது வருடங்களாக அவர்கள் அனுபவித்து வந்த நரக வேதனை போதாதா? அவர்களின் உயிரை எடுப்பது தான் தண்டனை என்றால் அதில் இருந்து சம்மந்தப்பட்ட தரப்பு எதிர்பார்ப்பது தான் என்ன!!
இப்போது  வேண்டிக்கொள்வது எல்லாம், இந்த மூவரின் மரணதண்டனைக்கு எதிராக அரசியல், கட்சி, பேதம் புறம் தள்ளி ஒன்றுபட்டு  போராடுவது   தான்.

வலைப்பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ள.

வணக்கம் நண்பர்களே!
என்ன தான் நாம் பல காலமாக பிளாக்கரை பயன்படுத்தி வந்தாலும், அதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில வசதிகளை பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டோம். அந்த வகையில் அநேகர் அறிந்த, சிலர் அறியாத ஒரு சிறு தகவலை தரலாம் என்று நினைக்கிறேன். நிகழ்வுகள் தளத்தில் திருடியது

எவ்வளவோ கஸ்ரப்பட்டு, தேடல்களுடன்(என்னை சொல்லல) எழுதி எம் வலைத்தளத்தில் வெளியிட்ட வலைப்பதிவுகளை நாம் சேமித்து வைத்துக்கொள்ளவே  விரும்புவோம். காரணம்,  நம் பிளாக்கர் எதிர்காலத்தில் முடங்கினாலோ, இல்லை நாமாக  தவறுதலாக அழித்தலோ மீண்டும்  நம் பதிவுகளை  ஆரம்பத்தில்  இருந்தது போல் கொண்டுவர, இல்லை புதிதாக ஒரு தளம் ஆரம்பித்து அதிலே நம் முன்னைய பதிவுகளை தரவேற்றிக்கொள்ள   அது தான் ஒரே வழி. நிகழ்வுகள் தளத்தில் திருடியது

இவ்வாறு என் வலைப்பதிவுகளை சேமித்து கொள்வதற்கு blogger backup utility என்ற சிறிய ஒரு மென்பொருளை தான் நான் பாவித்து வந்தேன். ஆனால் அதை விட மிக எளிய வழி ஒன்று பிளாக்கர் தளத்திலே இருப்பது சிறிது நாட்களுக்கு முன்னர் தான் கண்டு கொண்டேன்.

செய்ய வேண்டியது- 
முதலில் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் (பின்னூட்டங்கள் உட்ப்பட) தரவிறக்கி கொள்ள- நிகழ்வுகள் தளத்தில் திருடியது
setting> basic> Export blog  அதன் பின் தோன்றும் ' download ' ஐ அழுத்துங்கள்.


நீங்கள் தரவிறக்கும் போது, அது நாள் வரை உங்கள் வலை தளத்தில் பப்பிளிஷ் பண்ணிய அத்தனை பதிவுகளும் (பின்னூட்டங்கள் உட்பட) ஒரேயடியாக  XML  கோப்பு வடிவில் உங்கள் கணனியில் தரவிறங்கிக்கொள்ளும். ஒவ்வொரு பதிவு எழுதி வெளியிட்ட பின்னும் இம்முறை மூலம் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் தரவிறக்கி கொள்வது நல்லது. நிகழ்வுகள் தளத்தில் திருடியது


தரவிறக்கிய எம்பதிவுகளை மீண்டும்   தரவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின்-
setting> basic> import blog கீழே   உள்ள  படத்தில்  உள்ளவாறு ,ஏற்கனவே XML வடிவில் சேமித்து வைத்துள்ள கோப்பை கொடுங்கள்.


உங்கள் வலைத்தளத்தை முற்றாக செயல் இழக்க வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால்-
setting>basic>delete blog  (இதில் உள்ள அனுகூலம் 90 நாட்களுக்கு உள்ளே என்றால் அழித்த வலைப்பூவை மீட்டெடுக்க முடியும். கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ..., நிகழ்வுகள் தளத்தில் திருடியது


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;-)

நானும், அந்த இரண்டு பெண்களும்! (உண்மை சம்பவம்)

காதிலே ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு, மனசுக்கு இனிமையான பாடலை கேட்டுக்கொண்டு, பஸ்ஸில் ஜன்னலோர பயணம் எனக்கு மிகவும் அலாதியானது. என்ன தான் மனசு பாரமாய் இருந்தாலும் அந்த தருணங்களில் எல்லாம் மறந்து போய்விடும்.


அன்றும் அப்படி தான், சில இடைக்கால இனிமையான பாடல்களை ஹெட் ஃபோன் வழியாக கேட்டு ரசிச்சுக்கொண்டே, பஸ் ஏறுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அரை மணித்தியால பயணம் மேற்கொள்ள வேண்டும். எனினும், வழமைக்கு மாறாக அன்று பஸ்ஸும் என்னை கால் கடுக்க நிற்க வைக்காது வேளைக்கே வந்து விட்டது.

உடனே நம்மூர் பழக்கம் போல அடித்து முந்திக்கொண்டு ஏறாமால், எல்லோரும் ஏறி முடிந்த பின்னரே நானும் ஏறினேன். காரணம், தள்ளுப்பட்டுக்கொண்டு ஏறினால் வெள்ளைக்காரன் எதோ ஒரு வித்தியாசமான ஜந்து போல பார்ப்பான் என்பது முன்னைய அனுபவம்.

ஏறியவுடன் அமருவதற்கு வசதியாக அருகிலே ஒரு இருக்கை கிடந்தது. இருந்தும், ஜன்னலோர இருக்கையில் அமர வேண்டும் என்ற என் அவா, சற்று ஒரு அடி முன்னுக்கு சென்று ஒரு தடவை கண்களாலே பஸ்ஸின் ஜன்னலோர இருக்கைகளை நோட்டம் விட வைத்தது. ஒன்றும் அகப்படவில்லை.... சரி, கிடைத்த இருக்கையிலே உட்காரலாம் என்று முன்பக்கம் திரும்பாமலே அதே ஒரு அடி பின்னெடுத்து இருக்கையில் அமர முற்பட்டேன்; எதோ முட்டுப்பட்டது, சட்டென்று திரும்பி பார்த்தால் ஒரு ஆபிரிக்கன், கொல வெறியோட என்னை பார்த்தான். நான் உட்கார போனது அவன் மடியில்...

நான் தான் முதலில் வந்தேன் என்று அவனுடன் வாக்குவாதம் செய்யலாம் தான். ஆனால், அடி வாங்க உடம்பில தெம்பு வேணுமே!

இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட கதையாக அதுவும் போச்சு. சரி போனால் போகட்டும், நமக்கு தான் இரண்டுகால்கள் இருக்கே, நின்றால் என்ன தேஞ்சா போய்விடும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு பஸ்ஸின் பின்பக்கமாய் போய் நின்றுகொண்டேன்.

பஸ்ஸும் புறப்பட, சற்று நேரத்திலே மீண்டும் ஹெட் ஃபோன் வழி இனிமையான பாடல் ஒன்றுடன் ஒன்றித்துவிட்டேன். என்பார்வைகள் பஸ்ஸின் கண்ணாடி வழியே காட்சிகளை தரிசித்தாலும், மனம் பாடலிலே ஒன்றித்துவிட்டது.

இவ்வாறு, சிறிது நேரம் போனதே தெரியாது சென்று கொண்டிருக்க, எதோ ஒரு சைகை, என் நினைவுகளை அந்த பாடல்களில் இருந்து மீட்டு அதன் பக்கம் திருப்ப வைத்தது.....


ஒன்றல்ல, இரண்டு பெண்கள்! ஒன்று குண்டாக, மற்றையது ஒரு மெலிந்த பெண்ணு..!

'என்ன..' என்றேன் முகபாவனையில்!

அதில், மெல்லிய பொண்ணு என்னை நோக்கி 'காதில இருக்கிற ஹெட் ஃபோனை கழட்டு' என்பது போல சைகையில் சொன்னது.

"என்ர காது, என்ர ஹெட் ஃபோன், கழட்ட சொல்ல நீ யார்..?" என்று நானும் கேட்கலாம் தான். ஆனா, கேட்டது ஒரு பெண்ணாச்சே. சரி என்று நானும் கழட்டி விட்டு, 'என்ன' என்று கேட்பது கணக்காய் மீண்டும் தலையை மேல் நோக்கி ஆட்டினேன்.

யாருக்கு தெரியும் இப்பிடி ஒரு பிட்டை தூக்கி போடப்போறாள் என்று!
"நீ அழகாய் இருக்காய்" என்றாள் அந்த பொண்ணு, அத்தனை பேர் சூழ்ந்திருக்க... (அவர்கள் பாசையில்)

எனக்கோ ஷாக்காய் போச்சு. நெளிந்துகொண்டே சுற்றி உள்ளவர்களை தடவை பார்த்துவிட்டு, "என்ன ..?" என்றேன் மீண்டும் ஒருதடவை, .....புரியாதவன் போல!

" நீ அழகாய் இருக்காய்" என்றாள் மீண்டும் சிரித்துக்கொண்டே..

அது தான் தாமதம், உடனே வெள்ளை உடையிலே அழகு தேவதைகள் என்னை சுற்றி கும்மியடிப்பதாக என் நினைவுகள் சூழ்ந்து கொண்டது, சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன்! என்று பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். காரணம் அந்த இரு பெண்களும் தான்.


மேற்கத்தைய நாட்டவர்களை பொறுத்தவரை, போடும் உடையில் இருந்து, நடு ரோட்டில் நின்று முத்தம் கொடுப்பது வரை ஆணுக்கும் பெண்ணும் ஒரே அளவு சுதந்திரம் கொ(எ)டுத்திருப்பார்கள்; நல்ல விடயம் தான். ஆனால், இந்த இரு பெண்களும் அதையும் ஒரு படி தாண்டி, அந்த ஓரிரு நிமிடங்களில் நான் கவனித்த செயற்பாடுகள் ,குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று எவனோ சொல்லி வைத்ததை என்னுள் நினைவுபடுத்திக்கொண்டிருந்தது .

அந்த மெல்லிய பெண், தன் இரண்டு கைகளையும் பஸ்ஸில் நிற்பவர்கள் பலன்ஸுக்காக(balance) பிடிக்கும் கம்பிகளிலே பிடித்து அடிக்கடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டே நின்றாள். மற்றைய குண்டுப்பெண் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் இரண்டு கால்களையும் தூக்கி அருகில் இருக்கும் இருக்கையில் போட்டு, அந்த இருக்கையில் இருந்தவனை ஒரு வழி பண்ணுறேன் என்றே நின்றாள். பாவம்! அந்த இருக்கையில் இருந்தவன் கூட என்னை போல் ஒரு அப்பிராணி போல!

என்ன தான் இருந்தாலும், ஒரு பொண்ணு , அதுவும் கிட்டத்தட்ட பதினேழு பதினெட்டு வயசு மதிக்கத்தக்க பொண்ணு ஒருவனை பார்த்து அழகாய் இருக்காய் என்று சொன்னால் எவன் தான் அந்தரத்தில் பறக்கான்! எனக்கும் 'லைட்டா' அதே உணர்வுதான்! மனசுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்த பட்டாம் பூச்சிகளை அப்படியே அமத்தி வைத்திருந்தேன். எதையுமே என் முக பாவனையில் காட்டிக்கொள்ளாதவனாய், மீண்டும் ஹெட் ஃபோனை தூக்கி காதிலே மாட்டினேன்.
எனினும் அந்த பொண்ணு 'ஹெட் ஃபோனை மாட்டாதே உன்னோடு கதைக்கணும்' என்றது மெதுவாக! இருந்தும், நான் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை........................ என்று சொல்வதை விட வாங்கிக்கொள்ளாத போல நடித்தேன்.

'அப்படி என்ன தான் கதைக்கப்போறள்' என்று எனக்குள்ளும் ஆவலாக இருக்காதா என்ன? (உணர்வுளை அடக்கிக்கொள்ள நான் என்ன நித்தியானந்தா சாமியா!) அதால ஹெட் ஃபோன் வால்யூமை மிக மிக குறைத்துவிட்டேன். அவளும் விடுவதாக இல்லை. என் அருகிலே வந்தாள். என்னை தன் பக்கம் திரும்பச்சொல்லி முதுகில் தட்டி கூட பார்த்தாள். இருந்தாலும் நானும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. காரணம், பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் பலர் எம்மையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கோ வெக்கமாய் போச்சு! என் பார்வையை பஸ்சுக்கு வெளியே செலுத்தி அந்த பெண்ணை சற்றும் பொருட்படுத்தாதவனாக நின்றுகொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில ஒரு பஸ் தரிப்பிடம் வர, மேலும் சிலர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பஸ்சும் புறப்பட, கூடவே அந்த பெண்ணின் பேச்சையும் காணோம். எங்கே........ என்று சுற்றும் பார்த்தால், சற்று முன் பஸ்ஸில் ஏறிய ஒரு சைனிஸ்காரனின் முதுகை தட்டிக்கொண்டிருந்தாள். அவனும், யாரோ ஆண் சண்டைக்காக தன்னை தட்டுகிறான் என்று நினைத்தானோ என்னமோ!, சற்று கடுப்புடனே திரும்பினான்.
உடனே அந்த பொண்ணும், அவன் பேச்சை எதிர்பார்க்க முன்னமே அதே சிரிப்போடு சொன்னாள் "நீ அழகாய் இருக்காய்......."

கடுப்போடு திரும்பியவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் வல்பு, எனக்கோ மெயின் பியூஸ் போயிட்டுது.

இருந்தாலும், அந்த சயினிஸ்காரன் ரொம்பவே ஸ்பீட்டு ......!!

பெண்களை மறந்த பாண்டி!

மனிசிக்கு பட்டுச் சாறி
மகனுக்கு கொஞ்சம் ரொபி
சங்கானை போக வேண்டி, தனியாய்
சைக்கிளில் ஏறினான் பாண்டி!

உருவத்தில் இவன் நாற்று
உள்ளுக்குள் நினைப்போ யூத்து
சைக்கிளை மிதித்ததோ காற்று
சட்டென்று மெதுவானான் 

பிரேக் போட்டு!

                                                                    [படம் கூகுளே]
ரோட்டிலே வந்த பெண்ணால்
மனதை இழந்தான் தன்னால்
"சைட்" அடித்தான் கண்ணால், பஸ்
வருவதை மறந்தான் பின்னால்,

மனிசி இல்லா துணிவோ
தினிசு வந்தது நெஞ்சில்
கொலரை தூக்கி விட்டான், கையால்
தலையை மேவிக்கொண்டான்.
"ஹாய்" சொல்ல எண்ணியே,ரண்டு
கையையும் தூக்கினான் முன்னே;

....அப்பிடி ஒரு அடி... , பாண்டி
அடுத்த தெரு முடிவில்
"அம்மா" என்று கத்தியதில்
அம்புலன்ஸ் வண்டியும் நொடியில்..!

பெரியாஸ்பத்திரியில் பாண்டி ,இப்போ
பெண்களை மறந்த ஆண்டி
நடக்கிறதும் காலை நொண்டி, இனி
அஞ்சாறு மாசம் இவன் ஓட்டாண்டி..!


(சங்கானை- ஊரின் பெயர்.
பெரியாஸ்பத்திரி- யாழ் போதனா வைத்தியசாலை.)

மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்.

ஏனோ தெரியல்லீங்க, எனக்கும் சினிமாவுக்கும் கொஞ்சம் எட்டா பொருத்தம் தான். அதுக்காக சினிமா எல்லாம் பார்க்காதவன் நான் என்று சொல்ல வரவில்லை. நான் முதன் முதலாக தியேட்டருக்கு சென்று பார்த்த படம் மின்சாரக்கண்ணா. நான் நினைக்கிறேன் 2002ம் ஆண்டளவில் யாழ் ராஜா திரையரங்கில் பார்த்ததாக நினைவு. அப்போ எனக்கு கிட்டத்தட்ட பதின்மூன்று, பதின்நான்கு வயசிருக்கும். அந்த சின்ன வயசில, அந்த பெரிய திரையரங்கில் ரம்பாவை பார்த்த அதிர்ச்சியோ இல்லை எதோ..., அதன் பின்பு படம் பார்க்கவென்று இதுவரை தியேட்டர் பக்கம் சென்றதில்லை.. செல்ல விரும்பியதும் இல்லை. ஒரு வேளை கிரிக்கெட் மீது இருந்த மோகம் தான் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனாலும், தொலைக்காட்சியில் திரைப்படம் போனால் நேரம் கிடைக்கும் போது  பார்க்கத்  தவறுவதும்  இல்லை.

பதிவர் கார்த்தி அவர்கள் என்னை "மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்"  என்ற தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு நன்றியை கூறிக்கொண்டு நானும் தொடர்கிறேன். எனக்கும் சினிமாவுக்கும் எட்டா பொருத்தம் என்பதால ஏதாவது தவறுகள், பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்- சுட்டிக்காட்டுங்கள்.

உயர்ந்த மனிதன்! (ரசிப்புக்கு பழசு புதுசு தேவையில்லை தானே, ஏனென்டால் ஊருக்க இப்பவே எனக்கு அறுபது வயசெண்டு நம்பிக்கொண்டிருக்காங்கள் ஹிஹி)  நடிகர் திலகம், வாணிஸ்ரீ,  செளகார் ஜானகி, சிவகுமார் போன்றோர் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம்.  நான் பிறப்பதற்கு பல காலம் முதலே வெளியானது. மிகவும் செல்வந்தரான சிவாஜி ஏற்கனவே நிச்சயம் பண்ணிய பெண்ணான  செளகார் ஜானகியை  விட்டு, ஒரு ஏழை பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துடுவார். சிறிதுகால குடும்ப வாழ்க்கைக்கு பின்னர் அது சிவாஜின் பணக்கார தந்தைக்கு தெரிய வரவே, சிவாஜி இல்லாத நேரமாக பார்த்து கர்ப்பவதியாக இருந்த,  சிவாஜியின் காதல் மனைவி  தங்கியிருந்த வீட்டுக்கு தீ வைத்துவிட்டு,  அந்த சமயத்தில் வரும் சிவாஜியையும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, ஏற்கனவே நிச்சயம் பண்ணிய பொண்ணுக்கு  திருமணம் செய்து வைத்திடுவார். இவ்வாறு சில வருடங்கள் கழித்து, ஏற்கனவே இறந்து போனதாக கருதப்பட்ட , சிவாஜியின் காதல் மனைவிக்கு பிறந்த மகன் கால ஓட்டத்தில் சிவாஜியின் வீட்டிலேயே வேலைக்காரனாக சேர்ந்திடுவார். அதன் பின் சிவாஜி தன் மகனை அடையாளம் கண்டுகொள்கிறாரா? எவ்வாறு?  என்பது தான் மீதி கதை. சிவாஜியின் மகனாக சிவகுமார் நடித்திருந்தார். 

இதில், சிவாஜியின் மகனுக்கு சக ஊழியர்களால் திருட்டுப்பட்டம்  கட்டி சிவாஜியிடம் மாட்டி விட்ட போது, தன் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவனை திருடன் என நம்பி,  தன்  மகன் என்றும் தெரியாது சிவாஜி சிவகுமாரை அடித்து துரத்துவதும். சற்று நேரத்திலே சிவகுமாரின் காதலி மூலம் அவன் திருடன் இல்லை, தன் மகன் தான் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் வெளிக்காட்டும் உணர்வுகளும் ரொம்பவே அற்புதம். இதில் ஒரு அப்பாவியாக -நேர்மையானவனாக  நடித்த  சிவகுமாரின் நடிப்பும் அபாரம்.


சின்னத்தம்பி! பி வாசு இயக்க, பிரபு, குஷ்பூ நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட  திரைப்படம். இளையராஜா இசையில் பின்னியிருப்பார். பாடல்கள் அனைத்தும் அந்த நாட்களிலே பெரும்பாலானோர் வாய்களில் முனுமுனுக்கப்பட்டது.  இந்த மெகா ஹிட் திரைப்படமே பிரபுவுக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பெற்று  கொடுத்தது  என்றால் மிகையில்லை.  ஒரு அப்பாவியாக, உலகம் தெரியாத பிள்ளையாக தன் தாயால் வளர்க்கப்படும் பிரபு... தாய் வேடத்தில் மனோரம்மா நடித்திருந்தார். பணக்காரரான குஷ்பூவின் வீட்டில் வேலை செய்யும் போது, வெள்ளந்தி மனம் கொண்ட பிரபு மீது குஸ்பூவுக்கு காதல் ஏற்படுகிறது (  நிஜத்தில் ஏற்பட்டது வேற கதை ஹி ஹி)

ஒரு கட்டத்தில், தாலி எதற்காக கட்டுவது என்று கூட தெரியாத பிரபுவிடம் அதை கொடுத்து குஷ்பூ கட்டிப்பார். இதை அப்பாவி தனமாக தன் தாயான மனோரம்மாவிடம் சொல்லும் காட்சியும், அதன் பின்னரான மனோரம்மாவின் தவிப்பும்.... இன்றும் பலர் மனங்களில்  நிற்கும் திரைப்படம். 

துள்ளாத மனமும் துள்ளும்! விஜய்க்கு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை கொடுத்த படங்களில் இதுவும்  ஒன்று என சொல்லலாம். 99 களில் வெளிவந்து ஹிட் ஆகிய படம். ராஜ்குமாரின்  இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலமாகியது. இப்படத்துக்கும் ஏற்கனவே 96 களில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அதே போல இறுதியாக வெளிவந்த விஜயின் காவலன் திரைப்படத்தின் முன்பாதியும்  இதே படத்தை தான் நினைவு படுத்தும். ஆனால் இரண்டிலும் கிளைமாக்ஸ் வேறு.  நிச்சயமாக விஜயின் ரசிகர் தவிர்ந்தவர்களையும் இந்தப்படம் கவர்ந்திருக்கும். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், சிம்ரனின் நடிப்பு  பார்ப்பவர்கள் முகத்தில் சோக உணர்வுகளை   வரவைக்கும்.


அன்புள்ள ரஜனிக்காந்! சின்ன வயசில படம் பார்க்கிறது என்றால் அது அந்த படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்காகவும், சண்டைகாட்சிகளுக்காகவும் தான்(சொந்த அனுபவம்). அந்த வகையில் இந்த படத்தை சிறு வயசிலே பார்த்துவிட்டேன். மீண்டும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இரண்டாயிரத்து எட்டில் கொழும்பில் இருக்கும் போது கிடைத்தது. என் வாழ்நாளில் முதன் முதலாக ஒரு திரைப்படம் பார்த்து கண் கலங்கியது என்றால், அது  இந்த படத்தில் குழந்தை மீனாவின் நடிப்பில் தான். 

தெய்வத்திருமகள்! மேற்சொன்ன சின்னத்தம்பி  படத்தில் பிரபு கேரக்டருக்கும் தெய்வ திருமகள் படத்தில் விக்ரம் கேரக்டருக்கும் சில ஒற்றுமைகள்  உள்ளது! அத்தோடு, முதல் நான் குறிப்பிட்டது போல, அன்புள்ள ரஜனிக்காந் படத்தில் குழந்தை    மீனாவின் நடிப்புக்கு பிறகு மீண்டும் ஒரு தடவை  என்(பலர்) கண் கசிய  வைத்த குழந்தை  இந்த  நிலா (சாரா). கிளைமாக்ஸில், நீதி மன்ற காட்சியில்,  நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தகப்பன் மகளுக்கிடையிலான ஒரு பாச போராட்டத்தை தம்  நடிப்பின் மூலம் கொண்டுவந்து  பார்ப்பவர்களை  கலங்க   வைத்திருப்பார்கள்  விக்கிரமும்  நிலாவும்.

 எம் குமரன் சண் ஒப் மகாலக்ஸ்மி!  நான் இது வரை அதிக தடவைகள் பார்த்த திரைப்படம் என்றால் இது தான்(கூடவே விஜயின் பிரண்ட்ஸ்). தற்போதும் சந்தர்ப்பம் கிடைத்தால்  பார்க்க தவறுவதில்லை. படம் மிக பெரிய ஹிட் இல்லை என்றாலும் எனக்கு பிடிச்சிருந்தது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். முதல்  பாதி  தாய்  மகனுக்கிடையிலான  பாசத்தை அடிப்படையாக வைத்தும், இரண்டாம் பாதி மகன் தகப்பனுக்கிடையிலான புரிந்துணர்வுகளை கொண்டும் வெளிவந்த படம்.  தாய் இறக்கவும் அவரின் ஆசையின் படி  ஹீரோ சிங்கப்பூரில் உள்ள தன் தந்தையிடம் செல்கிறார். தந்தையான பிரகஸ்ராஜ் ஏற்கனவே இரண்டாம் கல்யாணம் செய்து,   ஒரு  பாச்சிங் சென்டர்  வைத்து நடத்திக்கொண்டு  இருப்பார்.
வளர்த்த கிடாவே மார்பில் பாய்வது போல, பிரகாஸ்ராஜ் தான் பயிற்றுவிக்கப்பட்டவனாலே (சிஷ்சியனால்) தாக்கப்பட்டு  வைத்தியசாலையில் கிடக்கும் போது, அவரின் முதல் மனைவியின்  மகனான ஜெயம் ரவி காட்டும் உணர்வுகளும்,  அவரை அங்கிருந்து  பாக்சிங்  சென்ரருக்கு அழைத்து சென்று தாக்கியவர்களுடன் சண்டை போடும்  போது பிரகாஸ் ராஜ்  முகத்தில் காட்டும் பெருமிதமும்  அந்த சில நிமிடங்களில் பார்ப்பவர்களை இருக்கையில் கட்டிப்போடும் .


இவை தவிர குணா, சந்தோஸ் சுப்ரமணியம், காதல், சேது, வாழ்வே மாயம், நான் அடிமை இல்லை .....இன்னும் பல படங்களை சொல்லாம். ஆனால், உடனடியாக நினைவுக்குள் வருகுதில்லை;-) 

நாய்க்கு ஒரு கவிதை(!)


கொளுத்தும் வெயிலிலும்
காவற் கடமை நிமிர்த்தம்,
காய்ந்து போய்
நடு முற்றத்தில் படுத்துக்கிடந்த
நாயார்..,
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
பார்த்துப் பரிதாபப்பட்டு
பக்கத்துக்கு கடைக்கு போய்,
அளவான தொப்பி
வாங்கி ஒன்று கொடுத்தேன்.

வாலை ஆட்டிக்கொண்டே
தலையை நீட்டியவர்,
உரிமையோடு ஒரு
கூலிங்கிளாஸ்_சும் கேட்டார்!
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
 "கருப்பு தான் எனக்கு
எடுப்பாக இருக்கும்!" என்று
சொன்னவர்கு..
ஆசை போலவே
அழகான ஒரு கண்ணாடியும்;

கருப்பு கண்ணாடி
போட்ட நாள் முதல்
புரட்சி தலைவன் MGR! என்று
நினைப்பு வேறு.
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
 ம்ம்ம்
நினைப்பில மட்டும் தான்..!

எவ்வளவு தான் அ(க)டி வாங்கினாலும்
வலியை வெளிக்காட்டா
வடிவேலு போல...,
எங்க வீட்டு நாயார்!
(நிகழ்வுகள் வலை தளத்தில் திருடியது)
குறிப்பு 1;-சில போட்டோக்களை பார்த்தால் ஏதாவது நாலு வரி எழுதணும் என்று தோணும், அந்த வகையில் என்றோ ஒரு நாள் எழுதிய கவிதை (!) தான் இது ;-)

குறிப்பு  2;- புகைப்படம் -கூகுளே