சாவு வீடு ..!


நேற்று வரை
உறவென்று இல்லாது 
உரிமையோடு பழகியவனை
இன்றொரு விபத்தில் இழந்துவிட்டேன்,
அதிர்ச்சியோடு
அவன் வீடு சென்றால்
அழுகுரல் ஓசையால்
நிறைந்துவிட்டது!

பெத்தவள் மாரடித்து
பித்தாகி வீழ்ந்துகிடந்தாள்..!

அழுது களைத்த மயக்கத்தில்
அண்ணன் தங்கை நால்வர்..!

உன்னுறவே  வேண்டாம் என்று உதறிச்சென்றவள்
உரிமையோடு அவன் கால் பிடித்து கதறுகிறாள்..!

முன்னுக்கு நின்று விம்முகிறான்
முந்தநாள்  எல்லை சண்டையில்
மல்லுக்கட்டிய
முன்வீட்டுக்காரன்..!

தன் வீட்டுக்குள்
இவன் நாய் புகுந்ததால்
கோட்  வரை  வழக்கு போட்டவன்,  
வாசலில்
வாழை கட்டுகிறான்..!

சிறு பிரச்சனையில் கைகலப்பான
சில நண்பர்கள்
காடுவரை  சுமக்க....
உறவுகள் அத்தனையும்
அன்றோடு  ஒற்றுமை
அவன் ஆசை போல...!
அவன் ......!!


தாய்மை புனிதமானதா..?

பத்து மாசம் வயிற்றிலும்
பத்துவருஷம் இடுப்பிலுமாய்
பாரமென்று எண்ணாது
பாசத்தோடு சுமந்தவள்!

பத்து மாசத்தோடு ஒரு தாயின் "சுமை" தீர்ந்துவிடுவதில்லை, வயிற்றில் இருந்து தன் சிசுவை இறக்கிய பின்பும் அவள் சுமக்கிறாள்.  தோளிலும், மார்பிலும், கண்களிலும் வைத்து சுமக்கிறாள். இவ்வாறு தன் ஆயுள் முழுவதும் தான் பெற்ற பிள்ளையை எதோ ஒரு விதத்தில் சுமக்கிறாள்.  இங்கே "சுமை" என்று  நான் குறிப்பிட்ட வார்த்தையே  மிக பெரிய தவறு தான். மூன்றாம் நபரின் கண்களுக்கு அது சுமையாக தெரிந்தாலும், தாய் தன் குழந்தையை  சுமை என்று கருதினால் இந்த உலகில் பாதி பேர் அநாதைகளாகவும், மனநோயாளிகளாகவும்  தான் உலாவுவார்கள்.

தாய்மை! இதற்கு நிகர் உலகத்தில் வேறு ஏதும் உண்டா?  ஒருவனுக்கு சுயநலம் அற்ற தூய அன்பை  அவனின்  தாயால் மட்டும் தான் வழங்க முடியும். இந்த விடயத்தில் என்றுமே தாய்மைக்கு  தான் முதலிடம். அதற்கு பிறகே மிகுதி.. எப்போதுமே தாய்மை கொண்டாடுவதற்குரியதே.

சாதாரணமாக ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நேர உணவூட்டும் போதே எவ்வளவு போராடுவாள்.  உணவு  வேண்டாம் என்று அக்குழந்தை அழுது அடம்பிடிக்கும், வாய்க்குள் ஊட்டிய உணவை தன் தாயின் முகத்திலேயே  துப்பும்.. வாந்தியாய் எடுத்து அவளையே அழுக்காக்கும்.... இவ்வாறு உணவு ஊட்டுவதில் இருந்து அக்குழந்தையை குளிப்பாட்டுவது வரை, அக்குழந்தையின் தேவைகளை குறிப்புணர்ந்து நிறைவேற்றுவது வரை  தாயின் போராட்டம் தொடரும்..  ஒரு நாள்,  இரு நாள் அல்ல.. ஐந்து,  பத்து வயசு வரை- அக்குழந்தை தானாக தன் கருமங்களை செய்ய தொடங்கும் வரை-அதன் பின்பும் கூட ... இந்த இடத்திலே தாயின் சகிப்புத்தன்மைக்கும், தியாகத்துக்கும்  ஈடு இணையாக  ஏதும்  இல்லை.

இந்த குறிப்புணர்ந்து தன் பிள்ளையின் தேவைகளை பூர்த்தி செய்வது கூட தாய்மைக்கு மட்டுமே உரித்தான ஒரு பண்பு தான். எத்தனையோ தருணங்களில் தன்  பிள்ளையின் ஆசைகளை பூர்த்தி செய்ய தன் ஆசைகளை நிராசையாக்கி கொள்கிறாள். இதை அத்தாய் தன் பிள்ளைக்கு காட்டி கொள்வதில்லை. பிள்ளையும் பல தருணங்களில் உணர்ந்துகொள்வதில்லை.

இவ்வாறாய் ஒரு தாயின் தியாகம், சகிப்புத்தன்மை, அவளின் அன்பு என்பவற்றை அவள் அரவணைப்பிலே வளரும்  பிள்ளையால்  நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். ஆகவே தாய்மையின் அருமையை இப்பூமியில் பிறந்த ஒவ்வொருத்தராலும் நன்றாக  உணரக்கூடியதாய் இருக்கிறது.  அதனால்  தான் தாய்மை  உலகில்  உயர்வாக  பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த விதி விலக்கு என்ற சொல் உலகிலே அனைத்துக்கும் பொருந்துகிறதே .  ஏன் தாய்மைக்கும் கூட..!

காமத்தால் கொண்டது கருவான பின், அதை அசிங்கம் என்று கருதி அழிப்பதில் இருந்து, பிறந்த குழந்தையை சூழ்நிலையை காரணம் காட்டி குப்பைத் தொட்டியில் வீசுவது  வரை  தாய்மையும் விதிவிலக்குக்கு உட்படுகிறது!

தன் கோபதாபங்களை குழந்தை மீது காட்டுவதிலிருந்து அஜாக்கரதையால்  குழந்தையின் எதிர்காலத்தை தொலைப்பது வரை தாய்மையும் விதிவிலக்காகிறது. (விதி விலக்கு என்பது பெரும்பான்மை அல்ல!)
இந்த வீடியோவை பாருங்கள்


சொல்லப்போனால் என்னை இந்த பதிவு எழுத தூண்டியதே இந்த வீடியோ தான். இதை பார்த்த போது மிகவும் அதிர்ந்துவிட்டேன்.   இப்படியும் ஒரு தாயா?

குறிப்பாய், ஒரு குழந்தைக்கு நிராட்டும் போது  மிக அவதானமாய் இருப்பார்கள். முக்கியமாய் அக்குழந்தையின் முகத்திலே  நீர் படுவதில்... காரணம், மூர்ச்சையாகி  உயிருக்கே ஆபத்தை  விளைவித்துவிடும்.

தான் பெற்ற பிள்ளையை கண்களிலே தாங்கும் ஆயிரம் தாய்மாரை என்னால் காண முடியும். ஆனால் இப்படியும் தாய்மை இருக்கிறதே? - இருக்கிறது விதிவிலக்காய்!

திலீபன் அண்ணாவுக்கு...!

எண்ணச்சிந்தைகளோ
எதிர்கால பயமும் இன்றி
வர்ணக் கனவுகளாய்
நிரம்பியிருக்கும் வயதுதனில்
மண்ணை காக்கவென
விண்ணேறிச் சென்றாயோ,
விழிகள் நனைகிறது!


மக்களை காப்பரென
நம்பியிருந்த கடவுள்
நல்லூரில் கல்லாயிருக்க;வெளி
வீதியில் ஓர் உருவம்,
வில் கொண்டோ
ஷெல் கொண்டோ அல்ல
அகிம்சை எனும் சொல் கொண்டு
அறப்போரில் பார்த்தீபன்!

ஐந்தம்ச கோரிக்கைகளை
அடக்குமுறையாளர் முன் வைத்து
தன் மெய்தனை உருக்கி
வீதியில் வீற்றிருக்க -இச்சிறு
வயசினிலே இளைஞனின் செயல் காண
அந்திபகல் பாராது
அலையலையாய் திரண்டமக்கள்
ஆற்றாமையும் துயரமும்
கண்கள் வழி பெருக்கெடுத்தது.


அடக்குமுறையின் கண்கள்
அகிம்சைக்கு அகலவிரியாது என்பதை
ஈழ வரலாறு ஊடே முன்னுணர்ந்தவனாய்
தான் கொண்ட கொள்கையில் உறுதியாகி,
பன்னிரு நாட்கள் பசித்திருந்து
அன்ன ஆகாரம் அற்று
அட்டையாய் சுருண்டு கிடந்தவன் உடலில்
இறுதியாய் ஒட்டியிருந்த உயிரும்
விட்டுப் பிரிந்தது!

அத்தனை நாட்களும்
அவனை சுற்றியிருந்து விம்மிய குரல்கள்
வெடி ஓசையாய் பீறிட்டு கியம்பியது;
கேட்பவர் நாடி நரம்புகளை உலுப்பும் நிகழ்வாய்
கண்ணீர் படிந்து நல்லூர் மண்ணும் கசிந்தது!

எதிரியையே கலங்க வைக்கும் இத்தியாகம்
இதிகாசங்களிலும் புராணங்களிலும்
தம்மையே கதாநாயகர்களாக
முன்னிறுத்தியவர்களுக்கு
ஏதும் செய்யவில்லை..!

குருதி வடியும்
கோரப் பற்களுடன்
நவீன புத்தர்கள் வெறித்திருக்க,
அவர்களுடன் கைகோர்த்து
ஈழத்தில் நர்த்தனமாடியவர்கள்
காற்றலையிலும் தம்
கயமைத்தனத்தை
காட்ட மறக்கவில்லை.

ஆயுதம் தூக்கும்
வன்முறையாளர்கள் ஈழத்தமிழர் என்று
பெரும் பிராயத்தனம் பண்ணி
உலகின் முன் ஏற்ப்படுத்தியவர்
பிம்பத்தை தவிடு பொடியாக்க
தன் உயிர் கொண்டு
உயிலெழுதி வைத்தான் திலீபன்!

ஆம்..!
ஈழ தாயும் ஒரு காந்தியை
கோட்ஸேகளிடம் ப(லி)றிகொடுத்தாள்!

(இக்கவிதையானது யாழ் பண்ணாகம் மெய்கண்டான் என்னும் பாடசாலையில் கல்வி கற்ற சிவநாதன் பவன் என்பவரால் 2004ம் ஆண்டு திலீபனின் நினைவு தினத்திற்காக எழுதப்பட்டு வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது.)

எப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..!

இந்த புராணங்கள், இதிகாசங்கள் என்பன  படிக்கும் போதும், அறிந்துகொள்ள முற்படும் போதும் மிக சுவாரசியமாக தான்  இருக்கும். ஆனால் பெரும்பாலானவை  பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை  ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது  பிம்பங்களாய் உடைந்து போய்விடும். அப்படி ஒன்று என் நினைவுகளில்....

அநேகரை  போல்  தான்,   எனக்கும் சின்ன வயசில  பக்தி,  புராண படங்கள் பார்க்கிறதென்றால்,  புராண கதைகள் வாசிக்கிறதென்றால் அவ்வளவு  பிரியம்.. யாழிலே  இடப்பெயர்வு  முடிந்து , சண்டைகளுக்கு  பின் சமாதான  ஒப்பந்தம் வந்ததோட  மின்சாரம் வந்துவிட்டது,  கூடவே  தொலைக்காட்சிகள்  பார்க்கும் வசதியும்  வந்துவிட்டது. 

அப்போது  இந்தியாவின் தூர்தர்ஷன்  அலைவரிசை  யாழிலே தெளிவாக வேலை செய்யும்.  அதிலே  சிறீ கிஷ்ணா   என்று  ஒரு நாடகம்  ஞாயிற்று கிழமைகளிலே  நண்பகலில் ஒளிபரப்புவார்கள்.. அந்த  நாடகத்தின் தீவிர விசிறியாக  இருந்தவர்களில்  நானும்  ஒருவன்..  நாடகம்  தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தொலைக்காட்சி முன்  சென்று குந்திவிடுவேன்.. அந்த  நாடகத்தில்  நடப்பதெல்லாம்  எதோ  ஒரு  காலத்தில் நடந்ததாக  அசைக்க  முடியாத  நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.


அதே போல  ராமாயணம்,  மகாபாரதம்,  சிறி ஹனுமான்  போன்ற  புராண கதை புத்தகங்களை  புரட்டி புரட்டியே   தாள்கள்  கிழிந்துவிடும்  அளவுக்கு அவற்றின் வாசிப்பு  மீது  ஈர்ப்பு..

இவையெல்லாம்  பெரிதாக   விவரம்  தெரியாத வயசில் தான்.  ஆனால் சிறிது காலத்துக்கு பின்னர் இந்த புராண கதைகள் பற்றி , சிந்திக்கும் போதும்,   அவற்றை  நடைமுறையுடன் ஒப்பிட்டு   பார்க்கும் போதும்  மிகவும் ஏமாற்றமாக இருக்கும்..  "எப்பூடி எல்லாம் ஏமாற்துறாங்களே.."  என்பது போன்ற  உணர்வு..

அது போன்ற உணர்வுகளில் ஒன்று  விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றில்  மேல் எழுந்து  சிறு  வயசிலே என்னை  குழம்ப  வைத்தது.  மீண்டும் இன்று  இணையத்தில் அந்த கதையை வாசித்ததில்  எழுத வேண்டும்  என்று தோன்றிச்சு.. நியாயத்தை வாசிப்பவர்கள் சொல்லுங்களேன்...!

பன்றி  தவிர்ந்து   ஏனையவற்றால்  சாகா வரம்  பெற்ற அரக்கன் தன்  சக்தியால்  பூமியை  காவி சென்று கடலுக்கடியில் ஒழித்து விடுவான்... பின் விஸ்ணு "வாரக அவதாரம்"  எடுத்து சென்று அரக்கனை அழித்து  பூமியை மீட்டு வருவார் என்பது தான் கதையின் கரு .. இதை தொலைக்காட்சி தொடரிலே சர்வ சாதாரணமா, அரக்கன் கையிலே பூமியை  காவி  காற்றில் மிதந்து சென்று   கடலுக்குள் ஒழிப்பதாக காட்டுவார்கள்..


இது  எவ்வளவு பெரிய முட்டாள்  தனமான  ஒரு  கற்பனை.

சரி, தன்  சக்தியால் பூமியை  காவுகிறான்  என்று   வைப்போம்,  ஆனால் ,பூமியை காவி   கடலுக்குள்  ஒழிப்பதென்பது .........?   அப்படியெனில், கடல் என்பது பூமி தவிர்ந்த பகுதியா?   என்னே ஒரு  லாஜிக்கே  இல்லாத  ஏமாற்றுத்தனமான  கருத்து.. !  ஆனால்  இது  மட்டுமல்லாது,  ஒரு படி  மேலே  சென்று,   வாரக அவதாரம் எடுத்த  விஸ்ணு  ஆயிரம்  வருடங்களாக  கடலுக்கடியிலே அந்த  அரக்கனுடன் போரிட்டு  பூமியை  மீட்டு  வருவாராம்..!  சரி, அப்படி என்றால் ஆயிரம்  வருடங்களாக  நீருக்குள் கிடந்த  மக்கள்  நிலை..  அவனவன் ஒரு அஞ்சு  நிமிஷம்  நீருக்க மூழ்கி கிடந்தாலே  செத்துடுவான் ,  இதில ஆயிரம் வருஷம்  கடலுக்கடியிலயாம்...!!

இதையெல்லாம் நாமும்  இது  வரை  நம்பிக்கிட்டு  தானே  இருக்கோம்..  இந்த சம்பவத்தை  ஒட்டி "வாரகா ஜயந்தி"  என்ற  விரதம்  கூட   நடைமுறையில் இருக்கிறது  என்றால் பாருங்களேன்.

ஆனால் நம்மவர்கள் இப்படிப்பட்ட  புராண கதைகளின்  உண்மை  தன்மை / நம்பக தன்மை  பற்றி  ஆராய்ந்தோ,  இல்லை  சிந்தித்து  பார்ப்பதோ  கிடையாது.  முன்னோர்கள் செய்தார்கள்  அதனால்  நாமும்  செய்வோம்  இல்லையெனில், தெய்வ  குற்றமாகிவிடும்  என்ற  மனநிலை  தான்  இதற்கு அடிப்படையாக இருக்குமோ...!
 

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி!











 இறுதியாக...


அனைத்தும் கலப்படம் அற்ற கற்பனைகள்.நகைசுவைக்காக மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல ;-)

ராவிட்டின் ஓய்வு - ஒரு ரசிகனாக..

எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம்  தொடங்கும் போது இலங்கை அணியின் ரசிகனாக தான் இருந்தேன். ஆனால் சிறிது காலங்களிலே  என் ரசனை இந்திய அணியின் பக்கம் திரும்பிவிட்டது. இதற்க்கு  காரணங்களில் ஒன்று,  அன்று இந்திய அணியின் மும் மூர்த்திகளாக கலக்கிக்கொண்டு இருந்த சச்சின், கங்குலி,  ராவிட் போன்றவர்கள்..
                                                             (ராவிட் ,சின்ன ராவிட்)
பொதுவாக சச்சினின் ஆட்டம் பிடிக்கும், கங்குலியின் ஆக்ரோசம் பிடிக்கும் ஆனால் இவர்கள் இருவரையும் தாண்டி ராவிட்டின் ஆட்டம் மட்டுமல்லாது, அவரின்  மைதானத்துக்கு வெளியிலான செயற்பாடுகள் கூட  எந்த  ஒரு சாமானிய கிரிக்கெட் ரசிகனுக்கும் அவர் மீதான மரியாதையை  உயர்த்தும். 

கவாஸ்கர், கபில் தேவ், அசாருதீன், கங்குலி ,கும்ளே போன்ற பிரபல வீரர்கள் இந்திய அணியில் இருந்திருந்தாலும் சச்சினுக்கு அடுத்த இடம் ராவிட்டுக்கு  தான்.

இந்திய கிரிக்கெட் பிரபலங்களில் அதிகம் சர்ச்சைகளில் சிக்கி  கொள்ளாத வீரர்களில் ராவிட்டும் முதன்மையானவர். நான் அறிந்து ராவிட் சிக்கிக்கொண்ட சர்ச்சைகளாக- பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றிலே கங்குலிக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற ராவிட், ஆடுகளத்தில் சச்சின் 194 ஓட்டங்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கும் போது இனிங்சை  இடை நிறுத்துவதாக அறிவித்தது.  மற்றையது, சிம்பாவேக்கு எதிரான போட்டியோன்றிலே பந்தின் மீது தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜெல் என்ற திராவகத்தை தடவியது. ஆனால் என்னை பொறுத்த வரை இவை இரண்டும் ராவிட் வேண்டுமென்றே செய்தாரா என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.

1996 ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக  தனது முதலாவது  ஒருநாள் போட்டி பயணத்தை தொடங்கிய ராவிட்டால் தொடர்ந்து பிரகாசிக்க முடியவில்லை. அந்த போட்டி உட்ப்பட அவர்  விளையாடிய முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் எடுத்த ஓட்டங்களாக 3, 4, 3, 11, 13 . அன்றைய பொழுதுகளிலே யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா, இவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் தலைவர் என்ற மகுடத்தை சூடிக்கொள்வார் என்று!
இவ்வாறாக ஆமை வேகத்தில் தொடங்கிய ராவிட்டின் ஒருநாள்  போட்டிகளின் பயணம் அவரின் விடாமுயற்சி, கடுமையான உழைப்பின் மூலம்  அதற்கான பலனை பெற்றுக்கொண்டார். ஆம்! அதுவரை ஆமை வேகத்தில் நகர்ந்த ராவிட் தொன்னூற்று ஒன்பதுகளின் பின்னர்  முயல் வேகத்தில் பாய தொடங்கினார். அந்த ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண தொடரிலே அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற  சாதனையையும் தன்னகத்தே பதிவு செய்து கொண்டார். (461 ஓட்டங்கள்  65.85 என்ற சராசரியுடன்)

99 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதியே ராவிட் ஒருநாள் போட்டிகளில் அதி சிறப்பாக விளையாடிய காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட  காலப்பகுதியில் 210 போட்டிகளில் விளையாடி 7134 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ராவிட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற பன்னிரண்டு சதங்களிலே பத்து சதம் இக்கால பகுதியில் பெறப்பட்டதாகும். அதே போல இன்னுமொரு ஆச்சரியமான விடயம், பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ராவிட் பெற்றுக்கொண்ட சதங்கள் வெறும் பன்னிரண்டு தான். ஆனால் இவர் பெற்ற அரை சதங்களின் எண்ணிக்கை 83 அதாவது சச்சினுக்கு அடுத்தபடியாக. (இன்சமாமும் இதே அளவு தான்).  மற்றும்  இதுவரை   டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலே பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்து வீரர்களில் ராவிட்டும் ஒருவர். (விரைவில் ஆறாவது வீரராக மகேல ஜெயவர்த்தன அந்த இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது)

அத்துடன் 2003 ஆண்டு  உலகக்கிண்ண போட்டிகள் உட்ப்பட இது வரை 73  ஒருநாள் போட்டிகளிலே ராவிட் விக்கெட் காப்பாளராகவும் இருந்துள்ளார்.

2005 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அணியின் தலைவர் என்ற மணி மகுடம் கங்குலியிடம் இருந்து ராவிட்டின் தலையை அலங்கரிக்கிறது.    அதன் பின் ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தினாலும், என்னை பொறுத்த வரை அவரின் துடுப்பாட்டம் மங்கி சென்றது இதன் பின்னரான காலப்பகுதியில் தான். முக்கியமாக  இரண்டாயிரத்து  ஆறுகளின்  பின்னர்!

79 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை  தாங்கிய ராவிட்டின் காலப்பகுதியிலே இந்திய அணி  42 வெற்றிகளையும் 33 தோல்விகளையும் பெற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு தலைமை வகித்தவர்களில் தோனிக்கு பிறகு இது தான் சிறந்த பெறுபேறாக கருதப்படுகிறது.


 2007 ம் ஆண்டு இடம்பெற்ற உலககிண்ண தொடரிலே  ராவிட் தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியுடன் முதல் சுற்றிலே தொடரில் இருந்து வெளியேறியது. இங்கு தான் தொடங்கியது  ஒருநாள் போட்டிகளிலே ராவிட்டின் இறங்குமுகம்! இது தான் ராவிட் தலைமையின்  மிக நெருக்கடியான காலப்பகுதி.  அதன் பின்னர் 2007 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின்னர் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்.  இதே ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலே ராவிட்டின் மோசமான ஆட்டத்தை காரணம் காட்டி அணியில் இருந்து விலக்கப்பட்டார். அதன் பின் அவருக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. காரணம் அவரின் இடத்தை நிரப்ப  புதிய திறமை வாய்ந்த  இளம் வீரர்கள் அணிக்குள் வந்து சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதுவரை ராவிட் இந்திய அணிக்காக விளையாடிய 344  ஒருநாள் போட்டிகளிலே அவ்வணி 160 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவ் வெற்றிகளின் போதான ராவிட்டின் துடுப்பாட்ட சராசரி 51 - இது ஒன்றே  போதும் அணியின் வெற்றியில் ராவிட்டின் பங்காளிக்கு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள.

இன்று 38 வயசை கடந்து  நிற்கும் ராவிட் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உண்மையிலே இந்திய அணியின் ரசிகர்களை பொறுத்தவரை இது மிக வருத்தமான செய்தி தான். இனி அந்த நீல நிற உடையுடன் ராவிட்டை மைதானத்தில் காண முடியாது.  ஆனால் ராவிட் எடுத்த முடிவு சரியானதே. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இனிமேல்  ராவிட்டின் பங்களிப்பு இந்திய அணிக்கு தேவை இருக்காது. ஏனெனில், பல திறமை வாய்ந்த இளம் வீரர்களே அணியில் இடம் கிடைக்காது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்களுக்கு வழி விடுவதே சிறந்தது.


                                                              (விடை பெரும் தருணம்)
அதே போல இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலே ராவிட்டுக்கு வாய்ப்பளித்து அவரை கவுரவமாக விடைபெற  வகை செய்த  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு-தெரிவுக்குழுவினருக்கு   பாராட்டுக்கள். ஆனாலும், அவரின் இறுதி தொடரையோ இல்லை இறுதி போட்டியை தானோ  வென்று,  அந்த வெற்றியை அவருக்கு  சமர்ப்பிக்க இந்திய அணி தவறியதை இட்டு வருத்தம் தான்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ராவிட்டின் இடத்தை நிரப்ப ஹோலியாலோ இல்லை ரோகித் சர்மாவாலோ முடியலாம்.  ஆனால் இன்னும் சில வருடங்களில் ராவிட் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுக்கொள்ளும் போது,  அது இந்திய அணிக்கு  மிக பெரிய  இடைவெளியை ஏற்ப்படுத்தி  செல்லும்  என்பது  மட்டும்  நிச்சயம்.

இன்று அணிக்குள் வந்து சற்று பிரபலமானவுடனே  அதை வைத்து பெண்கள், நடிகைகள் என்று கூத்தடிக்கும்  வீரர்கள் மத்தியில் ராவிட்.............கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! (முக்கியமாக இறுதி நிமிடங்களை பாருங்கள்)


'கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பார்கள்' ஆம்! ராவிட் போன்ற வீரர்கள்  இருக்கும் வரை அது சத்தியமான வார்த்தை தான்.

தமிழ் தேசிய போலி ஊடகங்களின் வியாபாரமும், விபச்சாரமும்!

இலாப நோக்கம் என்ற ஒன்று இருந்தாலும் ஊடகம் ஒன்றுக்கு ஊடக தர்மம், சமூக பொறுப்பு, அதன் மீதான அக்கறை, நேர்மை, நடுநிலைமை  என்பவை கட்டாயம் இருக்கும்/இருக்கத் தான் வேண்டும். இதற்க்கு மேற்கத்தேய ஊடகங்கள் பல உதாரணம்!  ஆனால், தமிழ் இனைய  ஊடகங்களை பொறுத்தவரை இவை அனைத்தும் விதிவிலக்கு! ஐரோப்பா, ஆங்கில, அரபு ஊடகங்கள் தம் நாட்டின் வளர்ச்சியிலும், நன்மை தீமைகளிலும் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இவர்களுடன் நான் எம் நாட்டு இணைய  ஊடகங்களை ஒப்பிட்டு பார்ப்பதுண்டு..என்னத்தை சொல்வது?


இன்று தமிழ் தேசியத்துக்கான ஊடகம் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சில இனைய ஊடகங்கள் 'சிங்கள இராணுவம் நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்ப்படுத்தப்பட்ட பின் கொலை' என்று பெண் போராளிகளின் நிர்வாணமாக்கப்பட்ட உடல்களை தங்கள் தளத்திலே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள்.. நாலு மிருகங்கள் காம வெறிகொண்டு இறந்த பிணங்களை துகிலுரிந்து புகைப்படங்களாக வெளியிட , அதை தங்கள் பொதுத்தளங்களிலே பிரசுரித்து ஆயிரக்கணக்கானோருக்கு  காட்டுகிறார்கள்.  அந்த வெறிகொண்ட மிருகங்களின் நோக்கம் அந்த பெண் போராளிகளை அவமானப்படுத்துவது தான் என்றால், அதுக்கு தங்கள் ஊடகங்கள் மூலம் தாங்களே வழி சமைத்து கொடுக்கிறார்கள் என்பது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை!

இசைப்பிரியா என்ற போராளி விடயத்திலும் இதை தான் செய்தார்கள்.  ஆங்கிலேயரின்  ஊடகமான சனல் 4 கூட அந்த வீடியோக்களை ஒரு கட்டத்துக்கு மேல் வெளியிட முடியாமல் உள்ளது என்று சொல்லி கட்டுப்படுத்தினார்கள். ஆனால் இவர்கள் ...........ஒரு படி மேல் சென்று யூடுபியிலும் அந்த பெண்ணின் மானத்தை ஏற்றி அனுதாபம் தேடிக்கொண்டார்கள் ..!!


எதற்காக இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்? அனுதாபம் தேடவா? பெண்களின் நிர்வாண உடல்களை காட்டி அனுதாபம் தேடுற அளவில் நிற்கிறீர்களே! உண்மையிலே இது உங்களுக்கு அவமானமாக இல்லையா, இதுவே இறந்த பெண் போராளிகள் உங்கள் தாய், சகோதரி என்றால் இவ்வாறு செய்வீர்களா?
வைக்கோ என்ற பெரிய மனுஷன் இசைப்பிரியா என்ற பெண் போராளியின் நிர்வாண உடலுக்கு இறங்கற்பா எழுதி வீடியோவாக இணையத்தில் ஏற்றியிருந்தார். இதுவே தன் சொந்த மகளாக இருந்தால் வைக்கோ இந்த காரியத்தை செய்திருப்பாரா? அந்த பெண் போராளிகள்  என்ன உணர்வுகள் அற்ற ஜடங்களாகவா அத்தனை காலமும் இருந்தார்கள். ஒரு வேளை காடுகளுக்குள் இருந்ததால் விலங்குகள் என்று எண்ணுகிறீர்களா? இல்லை இறந்த பிணங்கள் தானே என்று கருதி இவ்வாறாக செய்கிறீர்களா?

உங்களுக்கு இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் இது தொடர்பாக போர்க்குற்றவிசாரணை செய்யும் சம்மந்தப்பட்ட தரப்புக்கு அனுப்பி வைக்கலாம், அதைவிடுத்து எதற்காக அவர்களை அனுதாபம் தேடுகிறோம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்துகிறீர்கள்.

யார் இந்த பெண் போராளிகள் "உயிருக்கு பயந்து நீங்கள் நாட்டை விட்டு ஓடிய போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சாக தயார் என்று கையில் ஆயுதம் தூக்கி சென்றவர்கள்." இன்று உங்கள் செயலை கண்டு அவர்கள் ஆத்மாவும் காறி உமிழும், இந்த இனத்துக்காகவா போராட போனேன் என்று! 
இந்த காணொளிகளையும் புகைப்படங்களும் காணும் ஒவ்வொரு நொடியும் அந்த போராளிகளின் பெற்றவர்கள் படும் வேதனையை எண்ணிப்பாருங்கள். தமிழர்கள் மானத்தோடு சுதந்திரமாக வாழவேண்டும் என்று தான் அன்று ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால் இன்றோ, அதே சுதந்திரம் வேண்டி தமிழர்களின் மானத்தை அடகு வைத்துக்கொண்டிருக்கிறார்கள் தம்மை தமிழ் தேசியத்தின் ஊடகமாக காட்டிக்கொள்ளும் சில தமிழ் இணைய ஊடக வியாபாரிகள். 
°°°°°°°°°

அதிர்வு என்ற ஒரு இனைய ஊடகம் ஒரு செய்தி பிரசுரித்திருந்தது "யாழ்ப்பாணத்தில் ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகள்" என்று.. அதாவது இரண்டு ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள்! எதற்கு இந்த கேவலமான பிழைப்பு இவர்களுக்கு? இவர்கள் சென்று எண்ணி பார்த்தார்களா ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகளையும்? எவ்வளவு பெருமைகளை  தன்னகத்தே கொண்ட  மண் அது. உங்கள்  ஊடக வியாபாரத்துக்காக அந்த மண்ணை நாறடிப்பதா? இன்று இப்படியான சில ஊடகங்களில் வரும் செய்தியின் படி யாழிலே பாலியல் சீர்ககேடுகளும் வன்முறைகளும் மட்டும் தான் நடந்து கொண்டுள்ளது என்ற பிம்பத்தை ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளார்கள். முக்கியமாக இந்த அதிர்வு இணையத்தை பற்றி-அதன் கொள்கைகள் பற்றி சுருக்கமாக கூறவேண்டுமெனில் "இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்" என்று பிரச்சார செய்தி வெளியிட்டுவிட்டு, சற்றே  நாட்களில் இலங்கை அரசின் சிறீலங்கா டெலிக்கொம்_முக்கு தங்கள் மேற்ப்பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டு வருமானம் தேடிக்கொண்டவர்கள் - இது தான் இவர்களின் கொள்கை!
°°°°°°°
சிறிது காலத்துக்கு முன்னர் "நவீன யாழ்ப்பாணம்" என்ற போர்வையில் இயங்கும் 'வயது வந்தோருக்கு மட்டுமான செய்திகளை அதிகம் பிரசுரிக்கும் ஊடகம்' ஒன்று "கலாசார சீர்கேட்டால் யாழ்ப்பாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சி' என்று சொல்லி முதலைக்கண்ணீர் வடித்தார்கள். (அதாவது வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல..) இன்று ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரீட்சையில் மாணவர்களின் சித்தி வீதம் இதே ஊடகத்தின் முகத்தில் காறி உமிழ்வதாக அமைந்துள்ளது... 

முன்னைய காலத்தில் எல்லாம் இந்த தேசியத்துக்கான ஊடகங்கள் என்ற முகமூடி அணிந்து  வலம் வந்தவர்களுக்கு யுத்தம்  தீனி போட்டது. ஆனா இப்போ அது இல்லை. அது தான் கலாசாரத்தின் மீதும், கல்வி மீதும் கைவைக்கிறார்கள். மக்களின் அசமந்தபோக்குகளையும் கவனயீனங்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தம்மை வளர்த்துக்கொள்ள பார்க்கிறார்களே ஒழிய, மக்கள் மீது எந்த மண்ணாங்கட்டி அக்கறையும் இவர்களுக்கு இல்லை.

முடிந்தால் நியாயமான வழியில் தமிழ் மக்களின் விடிவுக்காக பாடுபடுங்கள்.. இல்லை இப்படியான காரியங்களை தான் தொடர்ந்து செய்வோம் என்றால் "யாழ்"   "தமிழ்" போன்ற  சொற் பிரயோகங்களில் உள்ள உங்கள் இனைய தளத்தின் பெயரை நீக்கிவிட்டு, உங்கள் சொந்த பெயரிலோ இல்லை உங்களை பெத்தவர்களின் பெயரிலோ ஊடகத்தை நடத்துங்கள்.  அப்படி நடாத்தினால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து என்று விட்டு போய்விடுவோம். ஆனால் ஊரின்  பெயரிலோ இல்லை மாவட்டத்தின் பெயரிலே ஊடகம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் அசிங்கங்களால் ஒட்டு மொத்த மக்களுக்கும் தான் தலைக்குனிவு.

செல்லப்பாவும், இரண்டு மனிசியும்..!

செல்லப்பாவுக்கு மனிசி இரண்டு,
மாதுவாக ஒன்றும்,
மதுப் போத்தல் வடிவில் மற்றொன்றும்.
செல்லம் பொழிய
இரு பிள்ளைகள் இருந்த போதும்
செல்லப்பாவுக்கு வேண்டியது
கள்ளு தான்.
கள்ளு அடிப்பதிலிவர் 
கர்ண பரம்பரை!

காலையில் எழுவார்
காதல் மனைவி கையால்
காரமாய் உண்பார், முடித்ததும்
கண்ணே மானே மயிலே என்று
அன்பால் அவளை உருக்கி- பின்
அலுவலகம் கிளம்பிடுவார்.
அது வரை
அவர் நல்ல பிள்ளை தான்!

 
வேலை முடிய
மாலை வேளையாகும்,
இரண்டாம் மனைவியை
அவர் மனம் தேடும்
காசு கையை அரித்தாலும்
காசா பனை கள்ளு கொட்டிலை
கால்கள் நாடும்.
கண்ணில் ஏக்கமும்,
நாவில் தாகமும்
கள்ளை கண்டவுடன் தொற்றிக்கொள்ளும்!

நிரந்தர வாடிக்கையாளர் என்ற நன்மதிப்பு,
ஒரு போத்தல்
கடனாய் கையில்; இருந்தும் போதாது,
இரண்டு போத்தல் அடித்தால் தான்
தரையில் நீந்துவார்
தண்ணீரில் நடப்பார்-ஆகவே
மீதி கெஞ்சல் கொஞ்சலுடன்
அடுத்த போத்திலும். அவ்வளவு தான்!


 
தண்ணி இறங்கியதும்
தன்னிலை மறப்பார்
வெறி ஏறியதும்
வெட்கம் இழப்பார்
வேட்டி கழன்றாலும்
வின்னராய் சுழலுவார்.

நாட்டின் குடிமகன் நான் என்பார்
நாட்டாமை போலவும் கதையளப்பார்
ஒபாமா எனக்கு மாமன் என்பார்
பில்கேட்ஸையும் உறவு கொள்வார்
தத்துவங்கள் பொழிவதில்
விவேகானந்தரையும்
பின் தள்ளிடுவார்!

வம்பென்று வந்தாலும் விடமாட்டார்
வேட்டியை மடித்து கட்டியே
வேங்கை போல்
வெறியில் பாய்வார்.
ஆமிக்காரனை கண்டாலும்
அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடார்.
போக்கிரி தனமெல்லாம்
போதையோடு வந்துவிடும்.

 
இருள் கண்களை  சூழவும், தன்
இருப்பிடம் தேடுவார்
போதையில் பாதை மறந்தாலும்
செல்லப்பா கால்கள்
சரியாக தான் செல்லும்.
சரிந்து, நிமிர்ந்து
விழுந்து, உருண்டு
வீடு.... வாசல் வரை; அதன் பின்
அவர் அப்பாவி..!

மது
ஏற்றிய போதையை
போக்கும் மருந்து
அவர் மாது- பவ்வியமாகவும் சரி
பத்திரகாளியாகவும் சரி!

வடிவேலு தொடக்கம்... கொஞ்சம் சீரியஸ் , மொக்கைஸ் ;-)

*வடிவேலு காமெடி பார்த்தும் வாய் திறந்து சிரியாதவன், வடிவான பொண்ணு ஒண்ணு வெளங்காத  பகிடி விட்டாலும் வீழ்ந்து வீழ்ந்து சிரித்தால் அது காதல். இதுவே கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்தால் அது கணவனின் கடமை.

*'தம்பி ரொம்ப தங்கமானவரு' என்று புகழப்படுபவனை கனநாள் கவனித்த திருடன் கவர்ந்து சென்று கல்லில் உரசிப்பார்த்தனாம் # தங்கத்தின் தரத்தில்  சந்தேகம்.
*ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான  குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)

*பொறாமை என்பது காலிலே போட்டிருக்கும்   சப்பாத்து போல வாசலிலே களட்டிடனும், போட்டி என்பது காலுறை போல உள்ளே அனுமதிக்கலாம் # நட்பு


 *சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை#  பேச்சு பேச்சு தான்!

 *தமிழ் கடவுளான முருகனுக்கு மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுகிறது  சமஸ்கிருதத்திலே  # உலகின் தொன்மை மொழி தமிழ். 


*இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.

*இலங்கையில் இருந்து கொண்டு,  ஆட்சி செய்யும் ஆளும் தரப்பை விமர்சிப்பவர்கள் வீட்டுக்கு பொலீஸ் வண்டி வருமா,  இல்லை வெள்ளை வண்டி வருமா  என்பதை,  குறித்த விமர்சகர்கள்  விமர்சிக்கும் தன்மையே தீர்மானிக்கிறது.

*தன்  பலத்தை கொண்டு ஒருவனை அடி பணிய வைப்பதென்பது அவன் பலவீனனாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம் # கந்தசாமி தத்துவம் ;-)

*தம்மை எதிர்ப்பவன் பின்னால் உள்ள மக்களின் மனங்களை வெல்வதே, அந்த எதிரியை தோற்க்கடிப்பதற்கான மிக சிறந்த வழி # தமிழ்நாட்டில் சிங்கள மக்கள்  மீது  தாக்குதல்.

*வீர வசனங்கள் மூலம் வெள்ளந்தி மனம் கொண்ட பாமர மக்களின்  உணர்ச்சிகள் தூண்டப்படலாம்.  அதுவும்  எவ்வளவு  காலம்? # புரிந்தால்  சரி தான்.

*வெளங்காத ஒரு  விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதன் மூலம் அந்த விடயம் மட்டுமல்ல, அதை சொல்பவரும்  மக்களால் காமடியாக தான் பார்க்கப்படுகிறார் # வெளங்கினா சரி தான்!

*ஆபாசம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை, பார்க்கும் அவரவர் கண்கள் தான் வரையறுத்துக்கொள்கிறது # கந்தசாமி தத்துவம் ;-)

*ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்- கேபி மாமா  # முப்பது வருடங்களின் முன் நீங்கள் செய்திருக்க வேண்டியது- காலத்தை பின்னகர்த்தும் மிசின் கண்டு பிடிக்கப்படவில்லை மாமா ;-)

மங்காத்தாவும், அபிசேக ஆராதனைகளும்.

ஈழ பிரச்சனையாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இல்லை இன்ன பிற  விடயங்களாக இருந்தாலும் சரி, மொழியால் மட்டுமல்ல உணர்வுகளாலும் கூட  ஈழ தமிழர்களும், தமிழக தமிழர்களும்  ஒன்றுபட்டவர்கள் தான் என்பதை என்றைக்கும் அவர் தம்  செயற்ப்பாடுகள்  மூலம் உணர்த்தி  நிற்ப்பார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் மங்காத்தா  திரைப்படம் ஈழத்திலே  உள்ள திரையரங்கில் ரிலீசான போது அஜித்தின் ரசிகர்கள் தமிழகத்தை போல பெருவாரியாக கொண்டாடினார்கள்.

முக்கியமாக மட்டக்களப்பில் வெடி கொளுத்தி பாலால் அஜித்தின் கட்டவுட்டுக்கு  அபிசேகம் செய்திருந்தார்கள். 

இதற்க்கு முன்னர் யாழ் திரையரங்குகளின் முன்னால் இவ்வாறான சில சம்பவங்கள் நடந்திருந்தாலும், முதன் முறையாக காணொளி வடிவில் அதை இணையத்தில் ஏற்றி  'நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை' என்று   காட்டியிருக்கிறார்கள். 


 ( முக்கியமா,  youtube ல் இந்த வீடியோவுக்கு கீழே உள்ள கமென்ட்'டுகளை  பார்த்துவிடாதீர்கள்.)

ஒரு விதத்தில் பார்க்கும் போது சந்தோசமாகவும் இருக்கிறது. முப்பது வருடங்களாக யுத்தத்தையும், அதுகொடுத்த துன்பத்தையும், வடுக்களையும் சுமந்து திரிந்த எமக்கு  இன்று சந்தோசமாக கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடிய  சூழலும்  வந்துவிட்டது.

ஒரு நடிகர்  மீது கொண்ட  அபிமானம் தான் இவ்வாறாக அவரை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கும் ஏதுவாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.  ஆனால் பொது வெளியில் ஒரு நடிகனின் கட்டவுட் வைத்து  பாலாபிசேகமும், இன்ன பிற  ஆதாரனைகளும்  செய்யும் அளவுக்கு நாம்  இருக்கிறோமே என்பது தான் என்றுமே சகித்துக்கொள்ள முடிவதில்லை..  

எமக்கு  ஒரு நடிகர் மீது அளவுகடந்த பற்று இருந்தால் அவரை  எங்கள்  நெஞ்சில் வைத்து பூசிக்கலாம்.  இல்லை எங்கள்  வீடுகளிலே சாமி அறையில் உள்ள படங்களை தூக்கி எறிந்துவிட்டு, குறித்த நடிகனின் படத்தை வைத்து தினமுமோ இல்லை ரிலீஸ் நேரமோ  ஆராதனைகளை நடாத்தலாம். (ஒருவேளை இதற்க்கு உங்கள்  பெற்றோர்/மனைவி  எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நடிகரின் அருமை பெருமைகள் சாதனைகள், திருவிளையாடல்கள் முதலியவற்றை அவர்களுக்கு எடுத்துக்கூறி புரியவைக்கலாம்) ஆனால் அவற்றையெல்லாம்  தாண்டி தெருவுக்கு கொண்டு வருவது........ !

இன்று நாம்  இருபது பேர் சேர்ந்து தலைக்கு அபிசேகம் செய்கிறோம் , எதிராக நாளை இருநூறு பேர் சேர்ந்து தளபதிக்கு ஆராதனைகள் செய்வார்கள். [ நான் நினைக்கிறேன் வடகிழக்கிலே தலையை விட தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று (நான் வாழ்ந்த பிரதேசத்தை மையமாக வைத்து சொல்கிறேன்)]  இதுவே  இவ்வாறு  தலை, தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி, லொட்டு லொசுக்கு என்று  போய்க்கொண்டே தான்  இருக்கும்.

தலையோ, தளபதியோ எந்த ஒரு காலத்திலும் தமக்கு அபிசேக ஆராதனைகள் செய்யச்சொல்லி வேண்டிக்கொண்டதில்லை. அதிலும் அஜித்துக்கு இது தேவையில்லை. காரணம், அவர் எந்த ஒரு காலத்திலும் தன்னை அரசியல்வாதியாக காட்டிக்கொள்வதில்லை.  மாறாக நீங்கள் அவர் மீது கொண்ட அன்பால் தான் இதை செய்கிறீர்கள் என்றால், இதை விட குறித்த நடிகரை பெருமைப்படுத்தும்  விதமாக  செய்ய கூடிய விடயங்கள்  எவ்வளவோ இருக்கே..!

நீங்கள் சொல்லலாம் 'ஒரு  லீட்டர் பாலை ஊற்றி வீணடிப்பதன் மூலம் யாருக்கும் எந்த வித நட்டமும் வந்துவிடப்போவதில்லை, யாரும்  பட்டினியால் செத்துவிடவும்போவதில்லை' என்று!  நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இன்னொன்றை நாம் புரிந்து கொள்ள மறுக்குறோமே,  "இவ்வாறான செயற்ப்பாடுகள் நம் இன்னொரு சமூகத்துக்கோ இல்லை  தலைமுறைக்கோ முன்மாதிரியாக இருக்கப்போகிறது"  என்பதை!

நான் இங்கே யாருக்கும் அட்வைஸ் பண்ண வரவில்லை. அப்படி  நீங்கள் நினைத்தால் ஐயாம் சாரி, இது வெறும் என் உணர்வுகளின் வெளிப்பாடு  மட்டுமே. இதை எழுதியதால் நாளை இவ்வாறான செயற்ப்பாடுகள் நிகழாது என்று நான் நினைத்தால் அது எனது மடமை.. ஆனால் இவ்வாறான செயற்ப்பாடுகளில் ஈடுபடுபவர்களில்  ஒருவர்  இதை  வாசித்து  புரிந்து  கொண்டால்........!

மதிப்புக்குரிய விஜய் அடிப்பொடிகளுக்கு...

மதிப்புக்குரிய (!) விஜய் அடிப்பொடிகளுக்கு,

                                                           நான் நலமே, அது போல விஜய் நலமே உங்கள் நலம் எனக்கொண்டு, இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முற்ப்பட்ட விஜய் ரசிகன் எழுதிக் கொ(ல்)ள்வது...
நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதில் எந்த தப்பும் இல்லை தான். அப்படி இருக்காதே என்று சொல்வதற்கு யாருக்கும்  எந்த உரிமையும்  இல்லை. அது தனிப்பட்டவர் விருப்பு வெறுப்புக்களை பொறுத்தது.  ஏன், நான் கூட  ரசிகன் என்று அல்லாது இப்பொழுதும்   விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். எனக்குள் இருக்கும் கொழந்தை மனசு தான் இதற்கு காரணமோ  தெரியவில்லை. (விஜய் குழந்தைகளுக்கு பிடிச்ச நட்சத்திரம் என்று சந்திரசேகர் அவர்கள் சொன்னதை நினைவில் கொள்க)

ஒருவர் மீதான ரசிப்புத்தன்மை அதி தீவிரமாகும் போது அதுவே தனிமனித வழிபாடாகிவிடுகிறது என்பதுவே எனது எண்ணமாக இருந்தது . அதை இன்று உங்கள் செய்கைகளை  பார்த்து உறுதிசெய்து கொள்கிறேன். அது தான், சமீப காலமாக போஸ்டர் ஓட்டுறன் என்ற போர்வையில்  நீங்கள் செய்யும் கேவலங்கள்.....  சகிக்க முடியல்ல. .நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம் வரவே செய்கிறது.  உண்மையிலே நீங்கள் நல்லவர்களா கெட்டவர்களா?  ஏனென்றால், கீழே உள்ள படங்களை பார்க்கும் போது, சத்தியமாய் அந்த படங்களை பார்ப்பவர்கள் சாணி எடுத்து அடிக்கணும் என்ற நோக்கிலேயே அச்சிடப்பட்டதாக உணர்கிறேன்!
விஜயை கடவுளாக வழிபடும்  அதி தீவிர வெறியர்கள் தவிர்ந்து சாதாரண நபர்களால் இந்த போஸ்டர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ளவே முடியாது.  சொல்லப்போனால், விஜய் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட அவரை வெறுக்க வைக்கும் நோக்கில் தான் அச்சடிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அதனால் தான்  உண்மையிலே நீங்கள் விஜய் ரசிகர்களா என்ற சந்தேகம் எழுகிறது. நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது 

இருந்தாலும்  இதை நீங்கள் அச்சிட்டதற்க்கு இரண்டு காரணங்களை உணர்கிறேன்.
1. ஒரு பிரபலத்துக்கு நீங்கள் நெருக்கமானவர் என்று சுற்றி உள்ளவர்களுக்கு காட்டிக்கொள்ள. அதாவது 'படம் காட்டுதல்'  (அதனால் தான்  அந்த போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
2. உங்கள் அதி  உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது


'வேலாயுதம்' என்ற பெயருக்காக விஜயை  முருகன், சிவன் போன்ற கடவுள்களுடன் ஒப்பிடுவதும். அந்த படம் வெளி வந்த பின்பு தான் நாட்டிலே அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்டு மக்கள் காக்கப்பட போவதாக காட்டுவதும் ... அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தற்க்காய்  அவரை தமிழ்நாட்டு அன்னா ஹசாரே என சித்தரிப்பதும்... நாளைய முதல்வராக விஜய் வருவார் என்ற நம்பிக்கையில்(!) அவரை mgr ருடம் ஒப்பிடுவதும்.................ஏன்பா ---------!  உண்மையிலே உங்களுக்கு அறிவு என்ற ஒன்று இருக்கா? தெரியாம தான் கேக்கிறன், எந்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் மக்கள் மனங்களில் விஜய் தொடர்பாக நல்ல அபிப்பிராயத்தை கொண்டு வரும் என்று  தெருத்தெருவாக விளம்பரப்படுத்துகிறீர்கள்?நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். இறுதியாக கலைஞர் டிவியில் காவலன் வெற்றி நிகழ்ச்சியின் போது விஜய் சொன்னார் 'தயவு செய்து என் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்யாதீர்கள், அது நாலு ஏழைகளின் வயிற்றை நிரப்ப உதவும்' என்று.. ஆனால் நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு "படம் காட்டுவது" தான் முக்கியமாச்சே!நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இன்று சமூக தளங்களை எடுத்துக்கொள்ளுங்கள், வடிவேலுவை விட அதிகமாக காமடி செய்யப்படும் நடிகராக விஜய் தான் இருக்கிறார். அதற்க்கு 90வீதமான காரணம் உங்களை போன்ற ஆட்கள் தான்.  தலைவா அரசியலுக்கு வா என்று சும்மா கிடந்த சங்கை தூக்கி ஊதிநீர்கள், அன்று பிடித்த சனி இன்று வரை உங்கள் மூலம் தான் அவரை  துரத்துகிறது. 

உண்மையில் சாதாரண மனநிலையில் உள்ளவர்களால் இவ்வாறு செய்ய முடியாது. அதுவும், ஒருபுறத்தால் அந்த மூன்று மனிதப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நீங்கள் இப்படிப்பட்ட போஸ்டர்களுடன் கொண்டாட்டம் நடத்தினீர்களே, இந்த இடத்தில் உங்கள் உணர்வுகள் மெச்சத்தக்கது.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது 

ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளைய தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நோக்கோடு, முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கும் விஜய்க்கு, உங்களின் இந்த நடவடிக்கைகள் மொத்தமாக சேர்ந்து அரசியலில் அவரை டி  ராஜேந்திரனை (மன்னிக்கவும்  டி ஆர் சார்)  விட காமெடியாக மக்கள் மத்தியில் சித்தரிக்கும் என்பது மட்டும் உண்மை.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

                                                                                                                                       இப்படிக்கு 
                                                                                                         -முன்னாள் விஜய் ரசிகன்-

பின் குறிப்பு- இங்கே சாதாரண விஜய் ரசிகர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளார்கள் என்பதுவே என் நினைப்பு.