எம் தாய் மொழி டமில் ..?

எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே  விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்!  இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்!  2000 ம் ஆண்டுகளுக்குக்கு  பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது.  ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்க்கு பெற்றோர்களும் முக்கிய காரணம்.பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும் அதே ஆங்கில மொழியில் கல்வி கற்க அனுப்புவது.   இது நான் அன்றாடம் பார்க்கும் சம்பவவங்கள்.


ஆங்கிலம் கற்பதை தவறு என்று சொல்லவில்லை.ஆனால்  நாம் கற்கும் கல்வியே ஆங்கில மொழி மூலம் கற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தோடு ஆங்கில மோகத்தில் தாய் மொழியில் மாற்றான் மொழியை கலந்து கதைப்பது அருவருக்கத்தக்கது. நீங்கள் சொல்லலாம் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப இவ்வாறு மாறுவது தவறு இல்லை என்று.ஏற்றுக்கொள்கிறேன்! நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறுவதில் தவறு இல்லை.ஆனால் நாகரிக மாற்றம் என்று சொல்லி நம் மொழியை கலப்படம் செய்ய நமக்கு என்ன உரிமை உள்ளது.


உலகின் அழிந்துவரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று ஐநாவின் தரவு கூறுகிறது. இது, கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் பிறந்த மூத்தகுடி நாம் ,உலகில் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று பீத்திக்கொள்ளும் நம்மை தலை குனிய வைக்கும் விடயம்.

 ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தாலே போதும்,  மெல்ல அந்த இனமும் அழிந்துவிடும்  என்பது நீங்கள் அறிந்த விடயம். இன்று  நம் இனத்தை அழிக்கும் காரியத்தை நாமே செவ்வன செய்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!


 நான் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எமக்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர்  சொன்னார்  "தன் குழந்தையை- அம்மாவை "மம்மி" என்றும் அப்பாவை "டாடி" என்றும்  அழைக்குமாறு  சொல்லிக்கொடுப்பதாகவும் நீங்களும் அப்படியே உங்கள் பெற்றோரை அழைக்க வேண்டும்  என்றும். அப்பொழுது எனக்கு  அவர் சொன்னது  பெரிதாக படவில்லை. ஆனால் இப்பொழுது அவர் சொன்னதை நினைக்கும் போது மிகவும் கடுப்பாக  உள்ளது, அந்த நேரத்தில் எழும்பி நாலு வார்த்தை கேக்கவில்லையே என்று  தோன்றுகிறது. இவ்வாறு ஆசிரியர்களே ஆங்கில மோகத்தில் இருந்தால் மாணவர்கள் எங்கனம்.

அதெப்படி, இங்கிலிசுகாரன் ஆங்கிலத்தில கதைக்கிறான்.பிரான்ஸ்காரன் பிரஞ்சில கதைக்கிறான்.சுவிஸ்காரன் ரொச்சில கதைக்கிறான்.ஏன் சிங்களவர்  கூட சுத்த சிங்களத்தில தான் கதைக்கிறார்கள்.ஆனால் நான் தமிழன் என்று சொல்லி மார்பை தட்டிக்கொள்ளும் தமிழன் மட்டும் தன் தாய் மொழியில் கதைப்பதை பெருமையாக எண்ணுகிறான் இல்லை.



கரீபியன் தீவுகளிலே இந்திய வம்சாவளியினர் வாழ்வதாகவும் ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தே இன்று வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும் ஒரு தடவை இணையத்தில் படித்து இருக்கிறேன். அப்பெடிஎன்றால் நாளை புலம்பெயர்ந்துள்ள தமிழ் சந்ததியின்  நிலையும் இது தானே..?


நம் எதிர்கால சந்ததிக்கு என்று  விட்டு செல்ல மொழி என்ற ஒன்று  மட்டுமே தமிழர்கள் வசம் உள்ளது.அதையாவது சிதைக்காமல் விட்டு  செல்வது நமது கடமை.

6 comments:

  1. நாம் என்னதான் வேறு மொழி பேசினாலும் மற்றவர்கள் நாம் எந்த இனத்தை சார்ந்தவர்கள் என்பதை அறிவதிலேயே குறியாய் இருப்பார்கள்.இதை தமிழகத்தை விட்டு வெளியில் வந்த அனைவரும் அறிந்திருப்பர்.அப்புறம் நாம் எந்த மொழியில் எப்படி பேசினாலும் நம்மை தமிழனாகவே பார்ப்பர்.எனவே தயவு செய்து தொரை வீட்டு நாயை குளிப்பாட்ட ஆசை படாதீர்கள்.

    ReplyDelete
  2. சேக்காளி @ நாம் எந்த மொழி பேசினாலும் நம் சொந்த மொழியை கலப்படம் செய்யலாமா? நாம் எந்த மொழி பேசினாலும் நம்மை தமிழனாக தான் பார்ப்பார்கள், சரி எவ்வளவு காலம்? ஒரு இனத்தின் அடையாளமே அவன் மொழி தானே.

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி @சேக்காளி

    ReplyDelete
  4. வணக்கம் கந்தசாமி.
    செய்வது நாயை குளிப்பாட்டும் வேலை.அதில் பெருமை பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது.அது போலத்தான் பிறந்தது தமிழனாய்.அதில் எனக்கு தமிழ் பேசத் தெரியாது என்று சொல்வதில் என்ன பெருமை வந்து விட போகிறது.அது மற்றவர்கள் மனநிலையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.இந்த[தொரை வீட்டு நாய்]சொல்லாடலை என் ஊரில் வேறு மாதிரி பயன் படுத்துவார்கள். அது கொச்சையாய்[பச்சையாய்] இருக்கும்.இந்தியாவின் தேசிய மொழி பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவிட்டிருக்கிறேன்.வந்து அதை படித்து கருத்து சொல்லுங்கள்.மற்றவர்களுடம் விவாதம் செய்யுங்கள்.

    ReplyDelete
  5. வணக்கம் அண்ணா @////அது போலத்தான் பிறந்தது தமிழனாய்.அதில் எனக்கு தமிழ் பேசத் தெரியாது என்று சொல்வதில் என்ன பெருமை வந்து விட போகிறது.அது மற்றவர்கள் மனநிலையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது///சரி நீங்கள் சொன்னது போல தமிழனாக பிறந்த ஒரு தமிழனுக்கு தமிழ் பேச தெரியாவிட்டால் இன்னமும் அவனின் எத்தனை சந்ததி தமிழனாக தன்னை அடையாளப்படுத்தும்? அவனுக்கு தமிழ் பேச தெரியவில்லை என்றால் எதோ ஒரு மாற்றான் மொழியை தனதாக ஏற்றுக்கொள்கிறான் என்று அர்த்தம்.நான் எம் மொழி பாதுக்காக்க படவேண்டும் என்று சொல்லுகிறேன் நீங்களோ இல்லை இனம் தான் முக்கியம் என்கிறீர்கள். மொழி அழிந்தால் இனம் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பது புரியவில்லை போல??

    ReplyDelete
  6. உயிர் இன்றி மனிதன் இல்லை அதே போல ஒரு மொழி இன்றி இனம் இல்லை

    ReplyDelete