பத்தாவது உலகக்கிண்ணம் வென்றது இந்திய அணி.

கடந்த சில மாதங்களாக பெருத்த எதிர்பார்ப்புடனும் பல ஊகங்களுடனும் காத்திருந்த "2011 உலகக்கிண்ணம் யாருக்கு" என்ற கேள்விக்கு நேற்றைய தினம் விடை கிடைத்தது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாவது உலகக்கிண்ணத்தை தோனி தலைமையிலான இந்திய அணி  தன்வசப்படுத்திக்கொண்டது.



நேற்றைய தினம் பெருத்த எதிர்பார்ப்புக்கள், பிரார்த்தனைகள் என்று அட்டகாசமாக  ஆரம்பமாகியது  கிண்ணத்துக்கான போட்டி. வான்கடே மைதானம் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே சாதகமானது என்றும், இவ் ஆடுகளத்திலே 270 -300 வரையிலான   ஓட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடும் அணி இலகுவாக குவித்துவிடும் என்றும், இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது மின்னொளியில் இலக்கை துரத்துவது கடினம் என்றும் கள ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்த நிலையில் நாணய சுழற்ச்சியில் தோற்கிறார் தோனி.

இந்திய அணி சார்பாக நெக்ரா நீக்கப்பட்டு சிறீசாந்த் உள்வாங்கப்பட்டிருந்தார். மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானது என்று தெரிந்தும் விஷப்பரீட்சையாக நல்ல போர்மில் இல்லாத சிறீசாந்தை தோனி அணியில் இணைத்திருந்தால் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை. ஒரு வேளை இந்தியா தோற்றிருந்தால்  தோனிக்கு எதிராக முன்வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இது இருந்திருக்கும்.  இலங்கை அணியிலே ஐந்து பந்துவீச்சாளர்கள் களமிறங்கினார்கள்.



இம்முறையும் ஆரம்ப ஓவர்களை அபாரமாக வீசினார் சகீர் .அவர் வீசிய முதல் மூன்று ஓவர்களும் ஓட்டமற்ற ஓவர்கள். ஆனால் முதல் ஐந்து ஓவர்களிலே ஆறு ஓட்டங்களை விட்டு கொடுத்த சகீர், இறுதி ஐந்து ஓவர்களிலே 54 ஓட்டங்களை வாரி வழங்கினார். அதாவது, இறுதி ஓவர்களை இவர் வீசும் போது மீண்டும் ஒரு முறை  2003 உலகக் கிண்ண  இறுதி போட்டியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

மகேலவுக்கு ஒரு சபாஸ். தனி ஒருவனாக நின்று, ஒரு பக்கத்தாலே விக்கெட்டுக்கள் சரிந்துகொண்டு இருந்தாலும் மறு பக்கத்திலே மிகவும் பொறுப்போடு நின்று ஆடி  274 ஓட்டங்களுக்கு அணியை நகர்த்தி வந்தார். குலசேகரா பெரேராவை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஆக கூடுதலாக 20 ஓட்டங்களை இலங்கை எடுக்க காரணமாகியது.  இலங்கை அணி இறுதி பவர் பிளே ஓவர்களில் எடுத்த ஓட்டம் 70 துக்கும் அதிகம்.



இலக்கு 275 ...., ஆடுகளம் வேறு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகமாக இருக்காது!  கடந்து முடிப்பார்களா இந்திய அணியினர்? அதற்கு ஏற்றா போல சேவாக்கும் வந்த வேகத்திலே திரும்பினார். சிறிய அதிரடியின் பின்  சச்சினும் அவசரமாக  பெவிலியன் திரும்பிட்டார். இனி என்ன இம்முறையும் இந்தியா கோட்டை விட்டுவிடும்  என்று தான் அநேக ரசிகர்களின் நினைப்பாக இருந்திருக்கும்.

இப்போட்டியிலே இந்திய அணியை பொறுத்தவரை மிகவும் பாராட்டுக்குரியவர்கள் காம்பீர் மற்றும் கோலி.  இவர்கள் போட்ட இணைப்பாட்டமே இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. பந்துகளை வீணடிக்காமல் ஒவ்வொரு, இரண்டு ஓட்டங்களாக தட்டி எடுத்தது  அபாரம். இதுவே இறுதி வரை அணி  நெருக்கடியை சந்திக்காமல் இருக்க ஏதுவாக அமைந்தது.



முதலில் துடுப்பெடுத்தாடி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டங்கள் எடுத்தும் பின்னர் இரண்டாவது இனிங்சிலே  விரைவாகவே சச்சின், சேவாக்கை களத்தை விட்டு வெளியேற்றியதும் இலங்கை அணியினரே நினைத்திருப்பார்கள் தமக்கு தான் வெற்றி என்று! சச்சினை வெளியேற்றியதுமே  அவர்கள் முகத்திலே வெற்றி களிப்பு துள்ளி குதித்தது )  ஏனெனில் முக்கியமான போட்டிகளிலே சச்சின் அடிச்சா தான் இந்தியா வெற்றி பெரும் என்ற நிலை இருந்தது உண்மை தானே! இலங்கையின் களத்தடுப்பு குறிப்பிடும் படியாக இருக்கவில்லை. காம்பீரின் ஒரு அருமையான ரன் அவுட் ஐ சங்கா கோட்டை விட்டார். அத்தோடு குலசேகரா பெரேரா இலங்கை அணியின் சிறீ சாந்கள்.....) நேற்றைய தினம் முரளியிடம் அதிகமே எதிர்பார்த்தேன். ஆனால் தனது இறுதி போட்டியிலே பெரிதாக முரளி சாதிக்கவில்லை. அத்தோடு ஆடுகளமும் துடுப்பாட்டத்துக்கு சாதகமா இருந்தது  துரதிஸ்ரம் .



கேப்டன் என்ற வகையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கி அணியை வெற்றி வரை அழைத்து சென்ற தோனிக்கு ஒரு சல்யூட். இறுதியில் ஒரு இமாலய சிக்ஸ்சருடன் தம் வெற்றியை உறுதி செய்தார். அத்தோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இத்தொடரிலே சகல துறைகளிலும் கலக்கி நான்கு முறை ஆட்ட நாயகனாக தேர்வாகி ,ஒரு உலககிண்ண தொடரிலே அதிக தடவை ஆட்ட நாயகன் விருது பெற்ற அரவிந்தடி சில்வாவின் சாதனையை சமப்படுத்திய யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தெரிவானார். (15 விக்கெட், 362 ஓட்டம் )



இந்திய அணியை பொறுத்தவரை இது அவர்களின் கூட்டு முயற்சிக்கும் ஒற்றுமையான செயற்ப்பாட்டுக்கும் கிடைத்த வெற்றியே. ஆரம்பத்தில் இருந்தே பலம் வாய்ந்த அணிகளோடு மோதி முன்னேறி கிண்ணத்தை கைப்பற்றி உள்ளார்கள். இங்கே தனிப்பட்டவர்களின் பங்களிப்பை விட அணியின் ஒன்றுபட்ட பங்களிப்பே அதிகம்.

T20 உலகக்கிண்ணம், ஆசிய கிண்ணம் , இன்று உலகக்கிண்ணம் என தோனி  தன் தலைமையில் அனைத்தையும் சாதித்துவிட்டார்  மீதி இருப்பது ICC சம்பியன் கிண்ணம் தான்.
கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டு இறுதிவரை வந்த இலங்கை அணிக்கும் வாழ்த்துக்கள்.

தனிநபர் சாதனைகள்.
தொடரில் அதி கூடிய ஓட்டம்

1. திலகரட்ன டில்சான்  467 (8 Matches)
2. சச்சின்  டெண்டுல்கர்  464 (8 Matches)
3. ஜோனதன்  ற்றோத்ட்  422 (7 Matches)
4. குமார்  சங்கக்கார  417 (8 Matches)
5. உபுல்  தரங்க  393 (8 Matches)

கூடிய விக்கெட்

1. ஷஹிட்  அப்பிடி  21 (8 Matches)
2. சாகிர்  கான்  19 (8 Matches)
3. டிம்  சௌதி  18 (8 Matches)
4. ராபின்  பீட்டர்சன் 15 (7 Matches)
5. முரளிதரன்   15 (8 Matches)
6 . யுவராஜ்                   15  (8 Matches )


அதிக சிக்ஸ்சர்கள் அடித்த வீரர் ரோஸ் ரெயிலர் (14 )அதிக நான்கு ஓட்டங்கள் பெற்ற வீரர் டில்சான் (58) அதிக பிடிகள் எடுத்த வீரர் மகேல (8)  அத்தோடு இத்தொடரிலே இரண்டு கட்ரிக் சாதனைகளும் (ரோச், மலிங்க ) நிகழ்த்தப்பட்டது அறிந்ததே.

3 comments:

  1. வான்கடே மைதானம் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே சாதகமானது என்றும் இவ் ஆடுகளத்திலே 270 -300 வரையிலான ஓட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடும் அணி இலகுவாக குவித்துவிடும் என்றும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது மின்னொளியில் இலக்கை துரத்துவது கடினம் என்றும் கள ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்த நிலையில் நாணய சுழற்ச்சியில் தோற்கிறார் தோனி//

    வணக்கம் சகோதரம், நன்றாக கூர்ந்து கவனித்திருக்கிறீங்கள் போல.. ஆய்வறிக்கை அசத்தலாக இருக்கிறது.

    ReplyDelete
  2. கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டு இறுதிவரை வந்த இலங்கை அணிக்கும் வாழ்த்துக்கள்.//

    உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து கிறிக்கற் பதிவுகளை வழங்கும் நீங்கள் ஒரு சேஞ்சுக்காக சமூகப் பதிவுகளையும் போடலாமே?
    நேற்றைய ஆட்டத்தை நானும் ரசித்துப் பார்த்தேன். இறுதி நேரத்தில் இந்திய அணியினரின் 76பந்துகளில் 78 எனும் ஓட்ட எண்ணிக்கையினைப் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அபாரமாக ஆடி வென்று விட்டார்கள்.

    அடுத்த பதிவு ஒரு கலக்கலான பதிவாக விளையாட்டைத் தவிர்த்து வரும் என்று நினைக்கிறேன். வரல்லை.........அப்புறம் பவர் ஸ்டாரோடை லத்திகா படத்தை 10 தடவை பார்க்கப் பண்ணி நோகடிச்சிடுவேன்..
    சும்மா ஒரு ஜாலிக்குச் சொல்றேன். சீரியஸ்ஸாகிடாதீங்க பாஸ்.

    ReplyDelete
  3. பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்.... கிண்ணம் வென்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete