வேட்டை நாய்கள்..


அதிகாரங்கள் முன்னிறுத்தப்பட்டு
சனநாயகம் என்ற
வர்ணம் பூசப்பட்ட 
எதோ ஒரு நாட்டின்
ஏவல் எந்திரங்கள் நாம்!

உணர்வுகள் எமக்கிருந்தும்
இடத்திற்கேற்ப அவற்றை
இறக்க வைக்கவும்
கற்றுத்தரப்பட்டுள்ளது!

சீருடை தரித்தவுடன்
மனிதம் மரித்துகொள்ளவும்
பழக்கப்படுத்திக்கொண்டோம்!

பார்வைக்குட்ப்பட்ட பின்
பலம் குன்றிய எதுவும்
எம் கோரப் பசிக்கு
உணவாகிப் போகலாம்!

அந்த வகையில்..

கட்டளைக்காக காத்திருக்கும்
வேட்டை நாய்களாகவும்
சில சமயங்களில்...
கடித்துக் குதறுவதற்கு
கொஞ்சத் தசைகளும்
சில எலும்புத்துண்டுகளும்...!

திருப்பிச்செலுத்திய இந்திய அணி - ஒரு பார்வை.

இங்கிலாந்து மண்ணிலே வைத்து இந்திய அணி மொத்தமாக வாங்கிய கடனில் முக்கால்வாசி  பகுதியை வட்டியுடனேயே திருப்பிக் கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணி கூட இதை எதிர்பார்த்திராது. அதனால் தானோ என்னமோ மைதானத்துக்குள் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட ஸ்டீபன் பின் தனது  'நாகரிகாமான' செயற்பாடுகளை அரங்கேற்றிக் கொண்டார்.

இந்திய அணி கடந்த மாதத்துக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணிலே பெற்ற படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதே பலவீனங்களை கொண்ட இந்திய அணியே இன்று மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அநேகமாக உலகக்கிண்ண போட்டிகளுக்கு பின்னர் டோனி அணி பெற்றுக்கொண்ட மிக பெரிய வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல உடல் உபாதையால் பல முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலகி இருக்கும் போது, இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரிவர பயன்படுத்தி, சொந்த மண்ணில் தாம் இன்றும் விழுத்த முடியாத அணி தான் என்பதை நிரூபித்துள்ளார்கள். 

ஒரு வேளை, இன்றைய நிலையில் இதே அணி இங்கிலாந்தில் விளையாடியிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பதற்கு  "பதில் இல்லையே.." காரணம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்கள் தான். இன்றும் இந்திய மண்ணில்  சுழலுக்கு மிகவும் தடுமாறுகிறது இங்கிலாந்து அணி. அதே சமயம் இங்கிலாந்து அணியின் வேகம் இந்திய மண்ணில் எடுபடவில்லை. கடந்த இரண்டாயிரத்து எட்டில் ஏழு போட்டிகள்  கொண்ட தொடரை ஐந்துக்கு பூச்சியமென இந்திய அணி கைப்பெற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விராட் ஹோலியின் துடுப்பாட்டம் முதிர்ச்சியாக இருந்தது. சொல்லப்போனால் இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இவர் விளையாடிய விதம் அற்புதம். இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம். அத்துடன் ஹோலி இதுவரை விளையாடிய அறுபத்தி ஆறு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலே தனது ஏழாவது சதத்தை இந்த தொடரில் கடந்துள்ளார். இப்படியே சென்றால் இந்திய அணிக்கு மிக சிறந்த எதிர்கால வீரர் உண்டு. ஹோலியை விட ரஹானே, கம்பீர், ரைனா, டோனி, ஜடேஜா என்று அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாகவே செயற்ப்பட்டிருந்தார்கள். 

இத்தொடரிலே ஆரம்ப விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்த போது நெருக்கடியான நிலையிலும் ஆறாம், ஏழாம்  இலக்க துடுப்பாட்டவீரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு அணியை வெற்றிக்கு /சிறந்த நிலைக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் முழுவதுமே அணியின் முதுகெலும்பாய் செயற்பட்டு தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்ற டோனியின் தலைமை மிக சிறப்பாக இருந்தது. முக்கியமாக இவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம். அத்துடன் ஐந்து போட்டிகளிலே நான்கு போட்டிகளில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டோனி எந்த ஒரு போட்டியிலும் இறுதி  வரை ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வரை நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட ஒருநாள் போட்டிகளிலே விளையாடியுள்ள டோனியின் துடுப்பாட்ட சராசரி ஐம்பதுக்கு மேல் - இதற்கு காரணம் டோனி ஆறாம் இலக்கத்தில் களமிறங்குவது தான் என்று கூறினாலும், நிகழ்காலத்தில் நூற்றி ஐம்பது போட்டிகளுக்கு மேல் விளையாடி ஐம்பது (+) சராசரியை கொண்டுள்ள வீரர்கள் யாரும் இல்லையே..(மைக்கல் பெவன் 'இருந்தார்')


ஹர்பஜனின் இடத்தை பிடித்திருந்த அஸ்வினின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித்திருந்தார். ஹர்பஜன் அணிக்கு திரும்பி தனது திறமையை மீண்டும் சிறப்பாக நிருபிக்காவிடத்து அவரின் நிலை அந்தோ கதி தான்! அதேபோல அவ்வப்போது சுழலில் கலக்கிய இன்னுமொரு வீரரான ரவீந்திர ஜடேஜா ஒரு சகல துறை வீரர் என்ற நிலையிலும்  சிறப்பாக செயற்ப்பட்ட போதும் யுவராஜ் அணிக்கு திரும்பினால் அவரின் இடம் அநேகமாக பறி போகும் நிலை தான். எனினும் சச்சின் இடத்தை அவ்வப்போது நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

உமேஷ் யாதவ், வருண் அருண் என்று நூற்று நாற்பதிலும் வேகமாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் விளையாடியிருந்தாலும் இந்த தொடரை வைத்து அவர்களை மதிப்பிட முடியாது. என்னை பொருத்தவரை இவர்களை விட இர்பான் பதான் எவ்வளவோ மேல்...!

அப்புறம் இங்கிலாந்து அணி பற்றி......
ஸ்வான், குக், ஜோனாதன் ட்ராட், கெவின் பிட்டர்சன் என்று நாலஞ்சு பேர் தொடர் தொடங்க முதல் கண்ணு தெரிஞ்சாலும் தொடரிலே தெரிஞ்சது என்னமோ இந்திய அணி வீரர்களின் முகம் மட்டும் தான்.  அத்துடன் அன்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் இருந்திருந்தாலும் இந்த தோல்விகள் தவிர்க்க முடியாதது தான்.  இனி ஒரே ஒரு  டி ருவண்டி இருக்கு.. அதையாவது  வென்று கொஞ்சம் கவுரவத்தோட நாடு போவார்களா..?  என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்கணும்..)

கடாபியும், மகிந்தரும் .

நான்கு தசாப்த கால லிபியாவின் சர்வதிகார ஆட்சி முறை முடிவுக்கு வந்திருப்பது அந்த நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் என்பது ஒரு புறமிருக்க, சர்வதிகாரி கடாபியை கைது செய்த பின்பு சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதது. காணொளி ஆதாரத்துடன் வெளி வந்திருக்கும்  இந்த செயலுக்கு மேற்க்குலகுகளின் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அநேகமாக இது தொடர்பில் மென் போக்கை தான் கடை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் தம் முகத்தில் தாமே சேறடிக்க யார் தான் விரும்புவார்கள்.

 அன்று அடால்ப் கிட்லர் தொடக்கம் இன்று மொகமர் கடாபி வரை  நாட்டு மக்களின் நலனை புறம் தள்ளி,  தம் (குடும்ப) நலனை முன்னுறுத்தி  சர்வதிகார  போக்குடன்  செயற்ப்படும் ஆட்சியாளர்களுக்கு முடிவு கடுமையானதாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் பிம்பங்களாக இன்னும் இவ்வுலகில் நடமாடுவோருக்கு  இது ஒரு படிப்பினையாக, பயத்தை ஏற்படுத்துக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 
கடாபிக்கு எதிரான போராட்டத்துக்கு 'சுயநல போக்குடன்' மேற்குலக வல்லரசுகளின்  பூரண ஆதரவு கிடைத்திருந்தாலும், அராஜக ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  லிபிய நாட்டு மக்களின் கிளர்ச்சிக்கு  கிடைத்த வெற்றி தான் இது. எனினும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது?  மேற்குலகின் கைப்புள்ளயாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இங்கே இன்னொன்றும் கவனிக்கதக்கது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எந்த போக்கை மகிந்த அரசு கடைபிடித்ததோ, அதே போக்கு தான் கடாபிக்கு இறுதி நேரத்தில்  நிகழ்ந்துள்ளது. ஆக மகிந்தரின் நண்பரான கடாபியின் மரணம் தொடர்பாக மகிந்த அரசின் குரல் எவ்வாறு  ஒலிக்கப்போகிறது? தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளப்போகிறதா? இல்லை அடக்கி வாசிக்கப்போகிறதா?

மனிதாபிமானம் அற்றவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகள்.

உலகின் பொதுவான  சர்வதேச சட்டவிதிகளுக்கமைய சில பிரதேசங்களுக்குள் யாராக இருந்தாலும் ஆயுதங்கள் சகிதம் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.  உதாரணமாக பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், வைத்தியசாலைகள்..

ஆனால் இலங்கையை பொறுத்த வரை பல தசாப்தங்களாகவே இது விதிவிலக்கு. இலங்கை அரசோ, இராணுவமோ  இவற்றை சற்றும் சாட்டை  செய்வதில்லை.  நான் கல்வி கற்ற பாடசாலைக்குள் இராணுவம் எத்தனையோ தடவைகள் ஆயுதங்களுடன் பிரவேசித்ததை கண்டுள்ளேன்.  அதே போல இறுதி யுத்தத்தில் இவர்கள் வைத்தியசாலைகளையும் இராணுவ இலக்காக கொண்டு செயற்ப்பட்டத்தை  இன்று உலகே  அறியும்.

ஆனால் இலங்கை இராணுவம் மட்டும் தானா இப்படி... 

அது 1987 ம் ஆண்டு  இதே நாள், திடீரென யாழ் போதனா வைத்தியசாலைக்குள் உள் நுழைந்த  'அமைதி காக்கும் படையினர்' என்ற போர்வையில் இலங்கைக்குள் உள் நுழைந்திருந்த ராஜீவ் படைகள், அவ் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள் உட்பட அறுபத்தி எட்டு பேரை ஈவு இரக்கம் அற்று கொலை வெறியோடு சுட்டுத்தள்ளினார்கள்.  யார் மீதோ உள்ள வெறுப்பை கோழைத் தனமாக அப்பாவி உயிர்கள் மீது காட்டினார்கள். 

இதில் மிக கொடுமையான விடயம் என்னவென்றால், எத்தனையோ  இந்திய இராணுவ சிப்பாய்கள் புலிகளுடன் மோதி குற்றுயிராக வைத்தியசாலைக்குள் கொண்டு வரப்பட்ட போது இதே வைத்தியர்களும் தாதிகளுமே அவர்கள் உயிரை காப்பாற்றி  மறு வாழ்வு கொடுத்தவர்கள். 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், "காந்தி தேசம் என்ற பெயருக்கும்" தலைக் குனிவை ஏற்ப்படுத்தும் விதமாக அன்று ஈழத்திலே இந்திய இராணுவம் செயற்ப்பட்டதற்கு இது ஒரு உதாரணம்.. இதை விட இன்னும் எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. ஒரு வேளை இவையெல்லாம் காணொளி வடிவில் அன்றே வெளி வந்திருந்தால் உலகையே உலுப்பியிருக்கும். ஏன், இவற்றையெல்லாம்  வழிநடத்திய ராஜிவின் இறப்பு  இந்தியர்களுக்கே மனவருத்தத்தை கொடுப்பதாக அமைந்திருக்காது.


இன்று  இருபத்திநான்கு வருடங்கள் ஓடி விட்டது. ஈழ தமிழனாக பிறந்துவிட்டால் நீதி என்ற ஒன்றை என்றுமே எதிர்பார்க்க முடியாது என்பதற்கு அமைய, எம்மால் அந்த உயிர்களுக்கு இன்று அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும்.

இன்று எந்த நேரத்திலும் ஈழ தமிழர்கள் மீது தமது வஞ்சகத்தை தீர்க்க துடிக்கும் சோனியாவுக்கும், சிதம்பரத்துக்கும், சுப்பிரமணிசுவாமிக்கும் ஏனையவர்களுக்கும்  இந்த விடயம் நன்றாகவே தெரியும்.  ஆனால்   ராஜிவின் கொலைக்காக கண்ணை மூடிக்கொண்டு  அந்த மூன்று உயிர்களை தூக்கில்  ஏற்ற துடிக்கும் காங்கிரசும், அதன் அடிவருடிகளும் இந்த சம்பவத்தை பொறுப்பேற்க முடியுமா? இழந்து போன அந்த உயிர்களை திருப்பி கொடுக்க முடியுமா? அந்த உயிர்களின் உறவுகளுக்கு இவர்கள் சொல்லப்போகும் பதில் என்ன?

புலம்பெயர்ந்த தமிழரும்,பச்சோந்திகளும்..!

பச்சோந்தி! இந்த  உயிரினத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.  தான் வாழும் சூழலுக்கேற்ப  தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு வித உயிரினத்தை இவ்வாறு அழைப்பார்கள்.   உயிர்வாழும் சூழலில் தன் பாதுகாப்பு கவசமாகவும்   "நிறம் மாறுவது" அதற்கு உதவுகிறது.


அதே போல, இந்த பெயர் கொண்டு சில மனிதர்களையும் விளிப்பார்கள். காரணம் சூழ்நிலைக்கும், தாம் சார்ந்த நபர்களுக்கும் ஏற்ப  தன் பேச்சு, செயல்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்களை பச்சோந்தி என்பார்கள். "நீ ஒரு பச்சோந்தி" என்று ஒருவனை ஏசும் போது அவனுக்கு கோபம் வரும். பச்சோந்தி என்று ஒருவனை விழிப்பது  சமூகத்தில் தாழ்வான வார்த்தையாகவே இருந்து வருகிறது.

ஆனாலும்,  சில தருணங்களில் எம் சூழ்நிலை நாம் பச்சோந்தி போல இருந்தாலே வாழ முடியுமாக உள்ளது.  உதாரணம் புலம்பெயர்ந்ததேசம்.

நாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு மேலைத்தேய/பிற  நாடு ஒன்றுக்கு குடி பெயரும் போது, அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது கட்டாயமாகிறது. அதாவது பச்சோந்தி போல.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை பல பழக்கவழக்கங்களை மாற்றினாலே நம்மால் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆரம்பத்தில் இது  மிகவும் கடினமாக தான் இருக்கும் , ஆனால் போக போக அதுவே பழக்கத்துக்கு வந்துவிடும். அதன் பின் பழையன கழிதலும் புதியன புகுதலும் போல  நாம் மாறிவிடுகிறோம்  என்று சொல்வதை விட,  சூழல் நம்மை மாற்றிவிடுகிறது  என்பதுவே உண்மை.

உதாரணமாக  நாட்டில் கிராமபுரங்களில் வசிக்கும் போது சாதாரணமாக  செருப்பு போட்டே அறியோம், ஆனால் இங்கு வந்தும்    அதே பழக்கத்தை பின்பற்றினால் இங்குள்ளவர்கள் நம்மை ஒரு வித்தியாசமான "ஜந்தாக" பார்ப்பது ஒருபுறம் இருக்க, இங்குள்ள காலநிலையால் குளிர் பிடித்தே இறந்துவிடுவோம். இவ்வாறு தான் உடுத்தும் உடை,  உணவு என்று பல பழக்கங்களை மாற்றிக்க வேண்டிய சூழ்நிலை.

புலம்பெயர்ந்து சென்றவர்கள்  மீண்டும் நாட்டுக்கு வரும் போது பல பழக்கவழக்கங்களில் மாறியிருப்பார்கள்.   அது  அவர்களின் இயைவாக்கம். ஆனால் சிலர் இதை நாகரிக மோகம் என்று விளிப்பார்கள். தவிர்க்க முடியாதது தான்!


அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எம்மை உடனடியாக மாற்றிக்கொள்வதென்பது  மிக கடினமானது தான்.  ஆரம்பத்தில் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பின் மேற்க்கத்தேய  சூழ்நிலைக்கு ஏற்ப எம்மை மாற்றிக்கொள்ள எவ்வாறு கஸ்ரப்பட்டிருப்போமோ, அதே நிலை தான் மீண்டும் பல வருடங்கள் கழித்து  தன் சொந்த நாட்டுக்கு வரும் போதும். 

ஆனால் இந்த இயைவாக்கம் உணவு, உடை தவிர்ந்து கலை,  பண்பாடுகள் பக்கம் சாய்ந்து   செல்லும் போது நமது  சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

எனக்கு தெரிந்து  இங்குள்ள  ஒரு குடும்பம்-  கணவன் மனைவி புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.  பிள்ளைகள் இங்கே  பிறந்து இப்பொழுது  பாடசாலையில் படிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாடசாலையிலே மாணவர்களுக்கான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும்  போது இவர்கள்  புறக்கணிக்கப்பட்டார்கள். காரணம் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள்  வழங்கபடுவதில்லையாம். இவர்கள்  இந்துக்களாக  இருந்ததால் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால்  தற்சமயம் அந்த  இருவரும் பெற்றோரின்   சம்மதத்துடன் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்,  வீட்டிலே தாயும் தகப்பனும் இந்துக்கள் பிள்ளைகள் கிறிஸ்தவர்கள். அதோடு அந்த இரு பிள்ளைகளுக்கும் தமிழ் என்பது வேப்பெண்ணை....


இவ்வாறு தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தின்  இயைவாக்கம் இவ்வாறு ஆரம்பித்து மொழி பண்பாடு, கலை .............. எதிர்காலத்தில் தம் அடையாளத்தை,  சுயத்தை அழித்திவிடுமோ...???

சில புலம்பெயர் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தம் காலாச்சாரத்திலே வளர்க்க முனைவார்கள். ஆனால் இது ஒரு போதும் முடியாதது. ஒரு பந்தை நீருக்குள் அடியில் வைத்திருக்கும் நோக்கோடு எவ்வளவு நேரம் தான் கையால் அமிழ்த்தி வைத்திருப்பது. கையை விலக்கவும் பீறிட்டு மேலெழும்பி நீரின் சமநிலையில் தான் வந்து நிற்கும்.  அதே போல தான் புலம்பெயர் தேசத்தில் பிறக்கும் தமிழ் சந்ததியும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்பவே தம் வாழ்க்கையை பழக்கி கொள்வார்கள், அது தான் அவர்களின் எதிர்காலத்துக்கும் உகந்ததாகவும் இருக்கும். அதை விடுத்து  நம் காலாச்சாரத்தில் அவர்களை கட்டாயப்படுட்டுவது முட்டாள் தனமானது. மாறாக  நம் சில கலை, பண்பாடுகளை பின்பற்ற செய்வதில் தப்பேதும் இல்லை.
புலம்பெயர் தேசங்களிலே தமிழ் மொழி என்பது அநேகமாக முதலாவது தலைமுறையுடன் காணாமல் போகும் நிலையில் தான் உள்ளது. உதாரணத்துக்கு இங்கே பிறந்து, இங்குள்ள பாடசாலையில் கல்வி கற்ப்பவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் மொழி  எழுத, வாசிக்க தெரியும் என்பது கேள்விக்குறியே?  எனினும், இங்கே பிறந்து இங்குள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு தமிழ் என்பது  என்றுமே இரண்டாம் மொழி தான். தமிழ் மொழி அவர்கள் பெற்றோரின் தாய் மொழி. பெற்றோருடன் தொடர்பாடலை மேற்கொள்வதை தவிர வேறு எந்த விதத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு  தமிழ் மொழி தேவைப்படப்போவதில்லை. காரணம் அவர்களின் எதிர்காலம் அவர்கள் பிறந்த அந்தந்த  நாட்டு  மொழிகளிலே தான் கடக்கப்போகிறது.

ஆக, என்ன தான்  இருந்தாலும்  புலம்பெயர்ந்த  தமிழ் சமூகம்  இன்னமும் நான்கு அல்லது  ஐந்து  தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள்  என்பது  மட்டும் கசப்பான உண்மை.

ஜி ரிவியும் ,சிறீதரனும் என் கேள்வியும்..!

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து தமிழர்களாலும் அறியப்பட்ட தொலைக்காட்சி தான் இந்த ஜி ரிவி. அரபு நாடுகளிலும் இது தன் தேவையை தொடருகிறது என்று நினைக்கிறேன். 

பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தும், கட்டணம் அறவிடாது (நன்கொடைகள் தவிர) சேவையை தொடரும் தொலைக்காட்சியும் இது ஒன்று என்று தான் நினைக்கிறேன். அதே போல தென்னிந்திய கலை, களியாட்ட நிகழ்வுகளை அதிகளவில் ஒளிபரப்புவதில்லை. மாறாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில்- இளையோர்களிடையே தமிழை ஊக்குவிப்பதில் பாலமாக செயற்பட்டு வருகிறது. அத்துடன்  ஈழம் சம்மந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கவும் தவறுவதில்லை. 

அந்த வகையில் சமீபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின்  அரசியல் கலந்துரையாடலை நேரடியாக ஒளிபரப்பியிருந்தார்கள்.

சிறீதரனை பற்றி ஏற்க்கனவே முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் இனைய ஊடகங்கள் அவ்வப்போது அவர் மீது முன்வைக்கும் விமர்சன தாக்குதலை படித்திருக்கிறேன். இருந்தாலும், இந்த இனைய தமிழ் ஊடகங்களின் செய்திகள் மீது எனக்கு பெரிதாக நம்பகத்தன்மை இல்லை, அலட்டிக்கொள்வதும்  இல்லை.  தனிப்பட்ட குரோதங்களை பொது வெளியில் வெளிப்படுத்த இவர்கள் தயங்குவதும் இல்லை. இவர்கள் ஒருவித வியாபாரிகளும் கூட... ஆக சிறீதரன் முன்னர்  எப்பிடி இருந்தாரோ.. இருந்திட்டுப் போகட்டும். நான் அவரை பற்றி ஆராய வரவில்லை மாறாக அவர் கருத்துக்களை தான் ...

ஜி ரிவியில் அவர் முன் வைத்த கருத்துக்கள் யதார்த்தமானதாக தான் இருந்தது. அரசியல்வாதிக்கே உரித்தான வீர வசனங்கள், வேக பேச்சுக்களை  தவிர்த்து தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

முக்கியமாக, ஈழத்திலே உதிர்ந்து போய் காணப்படும் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதில் உள்ள பிரச்சனையை- தலைமைத்துவ போட்டியிணை வெளிப்படையாக சொல்லியிருந்தார்(சங்கரியார் -சம்மந்தன்..). இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்டி மோதிச் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவது இப்போதைய தேவையாக உள்ளது.  ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது! ஒரு பூனைக்கு மணி கட்டிவிட்டால் அந்த மணியை கூட இருக்கும் ஏனைய பூனைகள் அறித்தெறியும் நிலையில் தான் இவைகள் உள்ளன.

இன்னொன்று, அவர் கூறிய கருத்துக்களில் சிந்திக்க வைத்தது, 'தமிழ் தேசிய கூட்டமைப்பை உலகளாவிய ரீதியில், அதாவது ஈழ தமிழர்கள் பரந்து  வாழும் தேசங்களில் விஸ்தரிப்பது.'

தலைமையை தாய் நாட்டில் இருக்க, ஏனைய நாடுகளில் கிளைகளை அமைத்து அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். இதன் மூலம் உலகில்  தாய் நாட்டை பிரிந்து வாழும் தமிழர்களுக்கும், தாய் நாட்டிலே வாழும் தமிழர்களுக்குமிடையே பாலமாக -பலமாக செயற்ப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இதிலும் சில சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக;
1.தலைமைத்துவ பிரச்சனை. (நாம தான் பெட்டிக்குள் அடைபட்ட நண்டுகளாச்சே)
2. பிரதிநித்தித்துவபடுத்தக்கூடிய மிகச்சிறந்த அரசியல் தலைமை இன்மை!
3.பழைய குரோதங்களை, கோபங்களை மறந்து ஈழத்தில் உள்ள அரசியல் 
  கட்சிகள் ஒன்றுபடுமா-அதிலுள்ள சிக்கல்கள்.
5.இவையனைத்துக்கும் மேலாக நம்பகத்தன்மை/ இவர்கள்  செயற்பாடு 
   மக்களை நோக்கியதாக இருக்குமா?

முடியாது என்பது ஏதும் இல்லை. இந்த குறைபாடுகள் நீங்கி  மேற்சொன்னவாறு  நிகழ்ந்தால், ஈழதமிழர்களுக்கென்று மிகப்பலமான ஒரு அமைப்பை - கட்சியை உலகளாவிய ரீதியில் அமைக்கலாம்.  இது மிக பெரிய ஒரு வாய்ப்பாக எம் முன்னே உள்ளது.. தமிழ் ..தமிழர் என்று நம் அரசியல்வாதிகள் கோசம் போடுவது உணர்வுபூர்வமானது என்றால் இதை செய்துகாட்டலாமே?

திருமாவும் பின்னே சீமானும் ...!
















கல்யாணமும் கலாச்சாரமும்... !

என்ன தான் கால ஓட்டம்  வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக  தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே  காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.

 சில சமயங்களிலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை  எண்ணும்  போது வியப்பாகவும்  வேடிக்கையாகவும்  இருக்கும்,  இன்னும் சில வேளைகளில்  "என்னடா இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பின்பற்றியிருக்கிறார்களே!  " என்பது போல எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும்.  ஆனால், நாம் பல சமயங்களில்  நம் முன்னோர்கள் எதற்காக இந்த நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் புரியாமலே அதை காலா காலமாக பின்பற்றி வருவோம்.


இதில் ஒன்று  திருமண சடங்கின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள்,மரபுகள்.....

நல்லதோ  கெட்டதோ ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத நாளாக திருமண நாள் அமைந்துவிடும்...

அத்தோடு, அந்த  நாள் அன்று  "ஐயர் ஓமம் வளர்த்து மந்திரம் சொல்வதிலிருந்து, இறுதியில் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்வது வரை"  மணமக்களை ஒரு வழி பண்ணிடுவார்கள். கிராம புறங்களில் தான்  "மிக நேர்த்தியாக"  இவற்றை பின்பற்றுவார்கள்.

திருமணவீட்டிலே வாழை கட்டுவதில் இருந்து, மணமக்களுக்கு அறுகரிசி தூவி வாழ்த்துவது  வரை எல்லாவற்றுக்கும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு காரணத்தை வரையறுத்து வைத்துள்ளார்கள். ஆனால் பல சமயங்களிலே "இவற்றை எதற்காக செய்கிறோம்" என்று  அர்த்தம்  புரியாமலே நாமும் செய்வோம்...

திருமண வீட்டின் முன்னே வாழை மரம் கட்டுவது வழக்கம்.  இதற்கு காரணம் 'திருமணம் செய்யும் ஜோடி வாழையடி வாழையாக சந்ததி விருத்தியடைய  வேண்டும்' என்ற  அர்த்தப்படவே  என்பது  யாவரும் அறிந்ததே. ஆனால் அதை விட  இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, ஒரு வாழை ஒரு தடவை தான் குலை போடும் ,அதே போலவே  ஒருவர் வாழ்க்கையிலே ஒரு தடவையே திருமணம் என்று  பொருள்படுவதற்காக வாழைமரம் கட்டப்படுவதை நம் முன்னோர்கள்  மரபாக கொண்டிருந்தார்களாம்.

தவிர, தென்னை  ஓலையும் கட்டும்  வழக்கம் உள்ளது.  தென்னை என்பது கற்பகதரு அதோடு நூற்றாண்டுகள் தாண்டிய ஆயுள் கொண்டது.  இதே போலவே மணமக்களின் வாழ்வும் இருக்க வேண்டும் என்று பொருள்படுமாம்.

திருமண வைபவத்தின்  இறுதியிலே  அறுகரிசியும் அறுகம்புல்லும் கொண்டு வயதில்  பெரியவர்கள் மணமக்களை ஆசிர்வதிப்பார்கள். ஆனால் உண்மையிலே அறுகரிசி பயன்படுத்தல் என்பது தவறான முறை. முன்னைய காலத்தில் நெல்லும்  அறுகம்புல்லும் கொண்டே ஆசிர்வதித்தார்களாம்.( சற்று நாட்களுக்கு முன்னர்  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே  ஒரு பெரியவர் சொல்ல கேள்வி). ஆனால், காலப்போக்கில் நெல் அரிசியாகிவிட்டது. ( 'நெல்லு அரிசியாக தானே மாறும்' என்று நீங்கள் கேட்க்கிறதும் நியாயம் தான்.)

நெல் பயன்படுத்துவதற்கு காரணம் "ஒரு சிராங்கு (கைப்பிடி) நெற்களை  விதைத்தால்  அறுவடையை பன்மடங்காக தரும் பண்பு கொண்டது".  அதே போலவே அறுகம்புல்லும்,  மிக குறுகிய காலத்தில் வேருன்றி படர்ந்து  பரவக்கூடிய ஆற்றல் கொண்டது.  இந்த காரணங்களுக்காகவே இவற்றை ஆசி வழங்குவதற்காக பயன்படுத்தினார்கள்.


'பெண் என்பவள் ஆணுக்கு அடுத்தவளே, அவளால் ஆண்களை போல சமூகத்திலே சகயமாக வாழ முடியாது.  அவள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கணும்,  தலை குனிந்து தான் நடக்கணும்' என்பவையும் முன்னையகாலத்தில்  நம் முன்னோர்கள் ஏற்படுத்திக்கொண்டவை  தான். ஒரு திருமணத்தின் போதும் இதற்கு ஏற்றா போல சில  நடைமுறைகளை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.

"திருமணம் அன்று பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டி கொள்ள வேண்டும், ஆண் கால்களிலே பெண் மெட்டி அணித்து விட  வேண்டும். ஏனெனில் ஆண் என்பவன் என்றுமே தலை நிமிர்ந்து நடப்பவன். ஆகவே கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்தவுடன்  ஒரு பெண் திருமணமானவளா என்று அடையாளம்  கண்டுகொள்வான். ஆனால் பெண்ணோ  தலை குனிந்து தான் நடப்பவள், ஆகவே அவள் ஒரு ஆண் திருமணமானவனா என்று அறிந்து கொள்ள அவனின் காலில் அணியும் மெட்டி உதவியாக இருக்கும்."

 அதே போலவே தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுக்களுக்கும் அர்த்தங்களாக "முதலாவது புகுந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள். இரண்டாவது பிறந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள் மூன்றாவது தெய்வத்துக்கு கட்டுப்பட்டவள்" என்ற அர்த்தங்கள் பொருள்படும்.  இவ்வாறு அநேக சம்பிரதாயங்கள் ஆணை காட்டிலும் பெண்ணை சுற்றி போடப்பட்ட  ஒரு கட்டுப்பாடாகவே எண்ணத்  தோன்றுகிறது.

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள இந்த நடைமுறையை எவ்வாறு எடுத்துக்கொள்வது.................!!  அவர்களின் அன்றைய காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமாக இருந்தது, ஆனால் கலாச்சாரம் என்ற போர்வையில்  இன்று  சிலவற்றை ஏற்றுக்கொள்வது  கடினம்  தான். 

சீமானா இப்படி ..?

"திருமா என்பவன் பாதி தமிழன் அல்ல ஆதி தமிழன், அவன் சோர தமிழன் அல்ல வீரத் தமிழன் என்பதால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு எங்கு அநீதி நிகழ்கிறதோ, பொங்கு தமிழர்க்கு இன்னல்கள் நிகழ்ந்தால் சங்காரம் நிசம் என சங்கே  முழங்கு என்று பாடிய பாவேந்தனின் பாட்டுக்கு இணங்க கொதித்து எழுகிற என் ஆருயிர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க!"- இது நான் சொல்லலிங்க ... 'வீரத்தமிழன் திருமா' மேடைக்கு பேச அழைக்க, பின்னணி இசை இல்லாத குறையாக சீமான் முழங்கித் தள்ளிய வார்த்தைகள் தான் இவை!

நான் இதற்க்கு முன்னாடி திருமாவை பற்றி ஏதேதோ எல்லாம் அறிந்சிருந்தன்.. இந்த வீடியோவை பார்த்ததுக்கப்புறம் "அட! நம்ம சீமானே சொல்லிப்புட்டார்.. ஆக, திருமா தங்க தலைவனாய் தான் இருப்பார். அவர் சீறும் சிங்கம், பாயும் சிறுத்தை!"  என்று  சீமான் மீதுள்ள நம்பிக்கையால் மனம் முடிவு செஞ்சு பெருமிதப்பட்டாலும், என்  மூளை கேட்க்கவில்லை.. ஆகவே நம்ம பெரியண்ணன்  கூகுளின் உதவியை வேண்டினேன். திருமாவின் பெயரை கொடுத்து அண்ணன் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரத்தை கேட்டேன்! 
பல்வேறு தகவல்களுடன் இப்புடியும் ஒரு படம் வந்திச்சு 

                               ஒரு வேளை இது சிறிலங்கா புலனாய்வு துறையின் சதியாய் இருக்குமோ?

அண்ணே சீமான்! எதுக்கு உங்களுக்கு இந்த வேலை.  அரசியல்வாதி எண்டாலே செம்பு தூக்குபவன் தான் என்ற  எழுதப்படாத வரையறையூடு  தான் நீங்களும் பயணிக்கிறீர்களா? திருமா நடத்துவது சாதி அரசியல் என்றால் நீங்கள் இவ்வளவு காலமும் நடத்திக்கொண்டிருப்பது இன அரசியலா? இது தான் உங்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடா? எவ்வளவு நம்பியிருந்தோம்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று நீங்க சொன்ன போது கூட 'அரசியல் என்று  இறங்கிட்டால் சில தந்திரங்கள், விட்டுக்கொடுப்புக்கள் இருக்கலாம்' என்ற ரீதியில் நான் கூட உங்களை ஆதரிச்சேன். ஏன், ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். இப்புடி பண்ணிப்புட்டிங்களே! "ஈழ தாய்க்கு" தான் விழா எடுக்குறிங்கள்.. அது போதாதா? நீங்கள் உங்கள் மானத்தை மட்டும் அடகு வைக்கவில்லை.. உங்களுக்கு பின்னால், உங்களையே நம்பிவந்த ஆயிரக்கணக்கான உண்மையான உணர்வாளர்களின் மானத்தையும் சேர்த்து தான்..! 

ஏண்ணே! உங்களுக்கு திருமா பற்றி தெரியாதா? முத்துக்குமாரின் ஆவி கூட உங்களை மன்னிக்காதுண்ணே! தேவர் சிலைக்கு மாலை போட்ட போதும்- உங்க தம்பி படத்தில் அவரை கவுரவித்த போதும் எழுந்த கேள்விகளுக்கு 'ஐயோ நான் தெரியாமல் செஞ்சுப்புட்டன்' என்று ஆதங்கப்பட்டீங்களே(!) இன்னுமா ....?  முடியலேண்ணே!

தமிழன் என்றால் ஏமாளி தான் என்று முதுகில பச்சை குத்துறத்துக்கு வேறு எந்த இனத்தவனும் வெளியில இருந்து வரவேண்டியதில்ல..!

அண்ணே! இனி 'பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி' எண்டு பொது இடங்களில சொல்லாதேங்கண்ணே... அசிங்கமாய் இருக்கு!  அதையும் மீறி பேரன்-தம்பி எண்ட வார்த்தைகள் உங்க வாய்க்குள் நுழைந்தால் 'ஜெயலலிதாவின் பேரன், திருமாவின் தம்பி' எண்டு சொல்லுங்கோ பொருத்தமாய் இருக்கும்!

புதைந்து போன பருவம் ..!


அம்மா என்றொரு உறவு
அவளை சுற்றி எமதுலகு
அதற்கடுத்தற் போல்  எதையும்
அலட்டிக்  கொள்ளாத பருவம்..!

நேற்று என்பதை மறந்து
நாளை என்பதை நினையாது
இன்றைய பொழுதிலே
சிந்தையை இழக்க வைக்கும் பருவம்..!

எம் சுமைகளையெல்லாம் களைந்து
பெற்றவர்  தோள்களில் சுமத்தி
"சுதந்திரம் பெற்றவர்களாய்"
உணர்ந்து  நின்ற  பருவம்..!

பள்ளி  நாட்கள்
பழகுவதற்கு இனிய நண்பர்கள்
கல்வி கசக்கும் போதும்
கலகலப்பு   இழந்துவிடாத  பருவம்..!

கோவில் கேணி
வாய்க்கால் வயல் என்று
எம் இனிமை பொழுதுகள்
பரந்து விரிந்து கிடந்த பருவம்..!

இறந்த காலம்
மீண்டும் நிகழாது என்றோ 
பிறிதொரு நாட்களில் 
நெஞ்சின் நினைவுகளாய் மீட்க
அன்றே புதைத்து வைத்த பருவம்..!

அக்தர் சச்சின் பற்றி சொன்னது சரியா?

கிரிக்கெட் உலகிலே மைதானத்தில் அன்று தொடக்கம் ஆக்ரோசமாக ஆடக்கூடிய அணிகளில் பாகிஸ்தான் அணிக்கு  தனி இடம் உண்டு. அதே போல பல்வேறு பட்ட திறமைமிக்க,  உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பெருமையும் பாகிஸ்தான் அணிக்கு உண்டு. என்னை பொறுத்தவரை உலகின் நம்பர் வன் அணியாக இருக்கக்கூடிய அத்தனை தகுதியும் பாகிஸ்தான் அணிக்கு இருந்து வந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு உள்ள மிக பெரிய குறைபாடு  அடிக்கடி சர்ச்சைகளில்  சிக்கிக்கொள்ளுதல். பாகிஸ்தான் அணியும் சர்ச்சைகளும் அண்ணன் தம்பி போல! உச்சத்தில் இருக்க வேண்டிய அணி இன்று கட்டெரும்பாய் தேய்ந்து போய் இருப்பதுக்கு காரணமும்  இது  தான். 

பாகிஸ்தான் அணிக்குள் எடுத்துக்கொண்டால் அன்று தொடக்கம் அதிகளவான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர்களில் அக்தருக்கு முதல் இடம் கொடுக்கலாம்.

அக்தரை  பொறுத்தவரை இரண்டு வகைகளில் பிரபலமானவர். ஒன்று அவரின் அசுர வேக பந்து வீச்சு மூலம், மற்றையது மைதானத்துக்குள்ளும் -வெளியிலும் நடந்துகொள்ளும் விதம். மிகத்திறமை வாய்ந்த ஒரு வீரரின் முழுமையான பங்களிப்பை பாகிஸ்தான் அணி  பெற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணம், அவர் தேடி சென்று வம்பை விலைக்கு வாங்கி அணி நிர்வாகத்தின் கோபத்தை கிளறுவதும், ஐசிசியால் அடிக்கடி தடைவிதிக்கப்படுவதும் தான்.

சர்ச்சைகளே உருவான அக்தர் இப்பொழுது  எழுதிய  கான்ட்ரோவெர்ஸியலி யூவர்ஸ் என்னும் சுயசரிதை புத்தகத்தில் சச்சின் ,ராவிட் பற்றி குறிப்பிட்டுள்ள விடயங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த இரு வீரர்களும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்று குறிப்பிட்டதோடு, சச்சின் தன் பந்தை கண்டு அஞ்சி நடுங்கினார் என்று  ஒரு பிட்டையும் தூக்கி போட்டுள்ளார்.  

சச்சின் ராவிட் மேட்ச் வின்னர் இல்லையா!
சச்சினை பொறுத்தவரை  ஆரம்பத்தில் சில போட்டிகளின் பின்னர் பலகாலமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கி வருகிறார். ஆக, ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மேட்ச் வின்னராக- இலக்கின் இறுதி வரை அணியை அழைத்து செல்பவராக  இருப்பது  சாத்தியமற்றது என்று அக்தருக்கு புரியாதது வியப்பாகவே  உள்ளது.  மற்றும்படி சச்சின் சிறந்த துடுப்பாட்ட வீரரா இல்லையா என்பதை அக்தர்  தீர்மானித்துவிட  முடியாது.
ஆனால் ராவிட் மேட்ச் வின்னர் இல்லை என்று சொன்னது அவரின் சிறுபிள்ளை தனமான-எந்தவிதமான தரவுகளையும் ஆராயாமல் எழுந்தமானமாக எழுதியுள்ளார் என்பதை தான் காட்டுகிறது! இதுவரை ராவிட் இந்திய அணிக்காக விளையாடிய 344  ஒருநாள் போட்டிகளிலே அவ்வணி 160 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவ் வெற்றிகளின் போதான ராவிட்டின் துடுப்பாட்ட சராசரி 51 - இது ஒன்றே  போதும் ராவிட் மேட்ச் வின்னரா இல்லையா என்ற முடிவுக்கு வர! 

தூபமிடும் அப்ரிடி
அதே போல அக்தரின் இந்த பிரச்சனைக்கு தூபம் போடும் வகையில் பாகிஸ்தானின் சகலதுறை வீரர் அப்ரிடியும் தன் பங்குக்கு, சச்சின் அக்தரின் பந்தை எதிர்கொள்ளும் போது அவரின் கால்கள் நடுங்கியதை நேரில் கண்டேன் என்று மீண்டும் இந்திய ரசிகர்களை சூடேத்தும் விதமாக கூறியுள்ளார். சாதாரணமாக ஒரு துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது கால்கள் முன் பின் நகரத்தான் செய்யும்- இது பயத்தால் ஏற்ப்பட்ட நடுக்கம் தான் என்று அப்ரிடியால் உணரமுடிகிறதென்றால் ஆச்சரியம் தான்! நான் நினைக்கிறேன் அப்ரிடிக்கு இந்திய அணி மீது வெறுப்பு வர காரணம், கடந்த ipl  போட்டிகளுக்கான ஏலத்திலே   பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக  இருக்கலாம். ஒரு முறை அவரே  இதை நேரடியாகவே சொல்லி ஆதங்கப்பட்டிருந்தார்.
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளிலே பாகிஸ்தானுடனான போட்டியில் சச்சின் அக்தர் பந்துவீச்சுக்கு கொடுத்த மரண அடியை மறந்து, அக்தரால் இவ்வாறு எழுத எப்படி  தான் முடிந்தது. இன்றும் அக்தர் பந்துக்கு ஆஃப் சைடில் சச்சின் அடித்த சூப்பர்  சிக்சர் கண் முன்னே  நிற்கிறது.  அந்த போட்டியிலே ஒரு கட்டத்திற்கு பிறகு அக்தரை பந்து வீச அழைத்த போது, அவர் சச்சினின் ருத்திர தாண்டவத்தை கண்டு அஞ்சி பந்து வீச மறுத்தாராம் என்று அந்த போட்டியிலே பாகிஸ்தான் சார்பாக விளையாடிவர்களில் ஒருவரான வாசிம் அக்ரமே குறிப்பிட்டுள்ளார்.

அன்று வக்கார் யூனிஸின் பந்தில்  தாடையிலே  அடிவாங்கி ரத்தம் சொட்ட, அதுக்கு சிறு  கட்டுப்போட்டுவிட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து துடுப்பெடுத்தாடியத்தில் இருந்து, கார்ட்னி வால்ஷ், கார்ட்லி ஆம்புரோஸ் போன்ற எத்தனையோ ஆபத்தான பந்துவீச்சாளர்களை எல்லாம் எதிர்கொண்டு தான் இன்று உலகின் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற நிலையை அடைந்தவர்.  அப்படிப்பட்ட சச்சினுக்கு அக்தர் எல்லாம் ஒரு பொருட்ட அல்ல.

அக்தரை பொறுத்தவரை அவரின் புத்தகம் விற்றுத்தீர்க்க வேண்டும். அவ்வாறு விற்று தீர்க்கப்பட வேண்டுமென்றால் அப்புத்தகத்திலே சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதி அதையே விளம்பரமாக வேண்டும்- அதை தான் செய்துள்ளார்.

ஆக, அக்தரை பொறுத்தவரை இப்பொழுது இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பகிரங்க மன்னிப்பு கோர  வேண்டும். இல்லையெனில் அவர் இந்தியாவுக்குள் நுழையும் போது கல்லெறி மட்டுமல்ல, செருப்பெறி விழுவது கூட தவிர்க்க முடியாதது தான்!



ஜெயலலிதா செய்தது சரியா..?

தன் ஆசை நாயகியை கவர்ந்து வைத்திருக்கும் இலங்கையை, ஊடறுத்து நிற்கும் கடலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ராமன்.  தன் நாயகியை மீட்க்க இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே இடையூறும் அந்த கடல் தான்.  அவன் கண்களில் சீதையை மீட்க்க வேண்டும் என்ற உறுதியே தணலாய் தெறித்தது. ராமனின் நோக்கத்தையே தன் நோக்கமாக கொண்டு பலத்த ஜோசனையோடு அவன் அருகில் இலக்குவணன் அமர்ந்திருந்தான்.  அவர்கள் இருவரையும் அனுமார், சுக்கிரீவன் உட்ப்பட வானரப்படைகளும் சூழ்ந்திருந்தார்கள்.. இப்பொழுது அவர்கள் நோக்கமெல்லாம் சீதையை மீட்ப்பதற்க்காய் முன்னிருக்கும்  கடலை கடக்க வேண்டும். 

இறுதியில், கடலை மேவி பாலம் அமைப்பதாய் முடிவு கொண்டார்கள்.  அடுத்த விநாடிகளிலே செயலிலும் இறங்கினார்கள். வானரப்படைகளின் வலிமை மிக்க உடலின் கடின உழைப்புடன் அங்கே பாலம் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.. மலைகளிலும், வெளிகளிலும் இருக்கும் கற்களை உருட்டியும் புரட்டியும் கடலுக்குள் கொண்டு வந்தார்கள்.  அப்பொழுது இவற்றையெல்லாம் அங்கே ஓரமாக நின்று ஒரு அணில் கவனித்துக்கொண்டிருந்தது.  இராமன் பற்றி ஏற்க்கனவே அந்த அணில் அறிந்திருந்ததால் அவர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தது. ஆகவே தானும் இராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று  முடிவு கொண்டு, யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காததாய், தன்னால் முடிந்த அளவு கற்களை புரட்டி வானர படைகளுக்கு உதவி புரிந்தது.  


அணிலின் இந்த செயலை வெகு நேரமாக கவனித்த இராமன், அதன் மீது அன்பு கொண்டவனாய் அதன் அருகிலே வந்தான்.  அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு தன் மீது இருக்கும் அன்பை மெச்சி, நன்றியுடன் தன் மூன்று விரல்களால் அதன் முதுகிலே தடிவினான்.  அதுவரை உடல் முழுவதும் சாம்பலின் நிறத்தில்  இருந்த அணில், இராமனின் கைவிரல் பட்ட இடம் மட்டும்  மூன்று வெள்ளை கோடுகளானது.  இங்கே தான் இன்னொரு அதிசயமும் நடந்தது.  அந்த ஒரு அணிலின்  முதுகில் ராமர் போட்ட கோடு உலகில் வாழும் ஒட்டுமொத்த அணில்களின் முதுகிலும் வீழ்ந்ததாம்!  இதுவே பிற்காலத்தில் இராமர் கோடு என்று அணில்களை  பெருமைப் படுத்தியது.

இது நடந்தது பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதல்!
ஆம்.. மீண்டும் வரலாறு(!)  திரும்புகிறது.. 

ஐந்து வருடங்களாக தன் கைகளை விட்டு விலகி இருந்த, 'முதல்வர்' என்ற அதிகார நாற்காலி மீது கொண்ட காதலால், அதை  அடையும் நோக்கோடு  காத்திருந்தார் ஜெயலலிதா.. அவருக்கு அருகிலே பல்வேறு சூழ்ச்சிகள் கொண்டு  'சோ' அமர்ந்திருந்தார். இவர்கள்  இருவரையும்  விஜயகாந்த் தலைமையிலான  வானரப்படைகள் தொண்டர் படைகள் சூழ்ந்திருந்தார்கள்.


அந்த அதிகார நாற்காலியை அடைவதற்கு  இவர்களுக்கு இருக்கம் ஒரே ஒரு இடையூறு கருணாநிதி தலைமயிலானா திமுக தான்! ஆகவே அவர்களை எதிர்த்து மிகப் பெரும் பிரச்சாரம் மேற்கொள்வதாக திட்டமிட்டு, செயல்களிலும் இறங்கினார்கள்.

இராமாயணத்திலே வானர படைகள் மது அருந்திவிட்டு அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இங்கேயும் அது விதி விலக்காகவில்லை. பல மீடியாக்களால் விஜயகாந்தை போதையில் பிரச்சாரம் செய்வதாக படம் போட்டு காட்டியது. 


இவ்வாறாக நாற்காலியை  இலக்காய் கொண்டு  வேகமாக பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருக்க,  இவை அனைத்தையும் அருகில் இருந்து ஒரு அணில் கவனித்துக்கொண்டிருந்தது.. யார் இந்த அணில்..? இதன் நோக்கம் தான் என்ன..? ஆனால் இதற்க்கு கருணாநிதி படையின் மீது வெறுப்பு மேலோங்கி இருந்தது! ஒரு வேளை அவரின் ஆட்சி காலத்தில் இந்த அணில் பாதிக்கப்பட்டிருக்கலாம்!  அதனால் தானோ என்னமோ அணிலுக்கு ஜெயா மீது அளவு கடந்த பாசம் பொங்கி வழிந்தது! அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு போயஸ் தோட்டம் சென்று அம்மையாருக்கு பூச்சொண்டு கொடுத்ததோடு, அவரின் தீராத பிரச்சாரத்தில் தன்னையும் ஆட்ப்படுத்திக்கொண்டது. 

இறுதியில் தேர்தலும் முடிந்தது. அணில் பற்று வைத்திருந்த அம்மா படை அமோக வெற்றியீட்டியது. அணிலும் சந்தோசப்பட்டதோடு, முன் ஜென்மத்திலே ராமனின் விரல்களால் கோடு வாங்கிய அணில் தான் தான் என்ற உண்மையையும் போட்டுடைத்தது! எல்லோரும் மூக்குமேலே விரல்வைத்து அணிலை பெருமையாக பார்க்க, தன்னடக்கதுக்கு முன்னுதாரணமான அணிலோ பலனை எதிர்பாராததாய் பவ்வுயமாக இருந்தது.


இந்த இடத்தில் தான் என் கேள்வி! அன்று பாலம் கட்ட உதவி புரிந்த அணிலுக்கு, அதன் முதுகிலே தன் விரல்களால்  கோடு போட்டு அணிகள் இனத்தையே பெருமை படுத்தினார் ராமன்.  ஆனால், இன்று ஜெயா  முதல்வராக, தன்னால் முடிந்தளவு உதவி புரிந்த இந்த அணிலுக்கு ஜெயலலிதா கோடுபோட்டு இந்த அணிலை பெருமைப்படுத்தவில்லையே ......ஏன் ..?

அரசியலில் தவழ துடிக்கும் இந்த அணிலுக்கு ஒரு புள்ளியாவது போட்டு கொடுத்தால், அதை வைத்தே இந்த அணில் கோடு போட எத்தனிக்கலாம்! ஆக,  ஜெயலலிதா இந்த அணிலுக்கு கோடு போடுவாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்!  

பின் குறிப்பு 1;- நகைச்சுவைக்காக(!) எழுதப்பட்ட, யாவும்                                  கலப்படமற்ற கற்பனையே.. (யாரப்பா அது கல்லெடுக்கிறது?)

பின் குறிப்பு 2  :- படங்கள் கூகுளே.