மகாகவியார் பாடல்

 (தமிழக அரசால் புனரமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ள பாரதியார் பிறந்து வளர்ந்த வீடு - எட்டயபுரம்)

டி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,

அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!

0 கருத்து:

Post a Comment