வேறு என்ன தான் தலைப்பு வைக்கிறது.... டோனியின் வெற்றியின் ரகசியம் அவரின் அதிஷ்டமா? இல்லை அவருக்கு கிடைக்கும் அணியின் திறமையா? என்று எண்ணும் நேரங்களில் எல்லாம் டோனியின் அதிஷ்டம் தான் என்று இறுதி முடிவு எடுக்க தோன்றுகிறது.
யாரும் நினைத்து பார்த்திராத வெற்றி..!
இந்த போட்டியில் வென்றால் தான் இறுதி போட்டி என்ற நிலையில் மிக முக்கியமான போட்டியாக சென்னை மற்றும் பாங்களூர் அணிகள் களமிறங்கியது. போட்டி இடம்பெற்ற மைதானம் உலகக்கிண்ண இறுதி போட்டியில் இலங்கையிடம் இருந்து "டோனி அணி" வெற்றியை தட்டி பறித்த மும்பை வான்கடே....!
கடந்த போட்டியில் சென்னை பாங்களூரிடம் வாங்கிய அடி மறக்கவில்லை போலும் அதால இம்முறை நாணய சுழற்ச்சியில் வென்றவுடன் களத்தடுப்பை எடுத்துக்கொண்டார்கள்.
முக்கியமான இந்த போட்டியில பெங்களூர் சார்பாக கெயிலிடம் நிறையவே எதிர்பார்த்தாலும் இம்முறை ஏமாற்றிவிட்டார். அதே போல வில்லியர்ஸ் கடந்த போட்டியை போல வந்த சில நிமிடங்களிலே பெவிலியன் திரும்ப சற்று இக்கட்டில் மாட்டிக்கொண்ட அணியை இம்முறையும் மிக பொறுப்பான, அதே சமயம் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மிக நல்ல ஸ்கோர்ருக்கு இட்டுச் சென்ற பெருமை "இந்தியாவின் வருங்கால நட்சத்திரம்" விராத் ஹோலிக்கே. மிகவும் பிரமாதமான ஆட்டம்..
சென்னையின் பந்துவீச்சு மோசம் தான் என்றாலும் போலிஞ்சரின் புண்ணியத்தால் 175 க்குள் கட்டுக்குள் கொண்டுவந்துட்டார்கள்.
ஒரு மிக பெரிய இலக்கோடு களமிறங்கிய சென்னைக்கு கடந்த போட்டியில் கிடைத்த கசப்பான அதே ஆரம்பம். கஸி டக் அவுட்! . "ஏறினால் ஏற்றம் இறங்கினால் அதே வேகத்தில் இறக்கம் " இது விஜய் என்ற பெயரில் உள்ளவர்களுக்கெல்லாம் பொருந்தும் போல! , தொடர்ந்து சொதப்பும் முரளி விஜய் இந்த போட்டியிலும் வந்த வேகத்தில் கடமையை முடித்து கிளம்பினார்.
அடுத்து பத்திரிநாத்! நெருக்கடியான நிலை தான், ஆனாலும் தொடர்ந்து பந்துகளை வீணடித்துக்கொண்டு நிற்கும் போது ஆட்டத்தை பார்க்கவே வெறுப்பாக இருந்தது மட்டுமல்ல தோல்வி என்றே எல்லோரும் முடிவு செய்திருப்பார்கள். எனினும் ஒருவாறு சமாளித்து ஆடி தன் பங்குக்கு 34 ஓட்டங்களுடன் வெளியேறினார். அது வரை படு மந்தமாக போய்க்கொண்டிருந்த ஆட்டம் டோனி களமிறங்கவும் சற்று விறுவிறுப்பாக தொடங்கியது.
ஒரு பக்கத்தால கெயில் சிறப்பாக பந்து வீசிக்கொண்டு இருந்தாலும் மறு பக்கத்தால வெக்டோரி , ஹோலி ,மிதுன் என்று ஓட்டங்களை வாரி வழங்கினார்கள்.
இருந்தாலும் பதினாறாவது ஓவர் வரை வெற்றி மிக பிரகாசமாக பாங்களூர் பக்கமே இருந்தது. பதினேழாவது ஓவர் வீச வந்த சகீர்................! ஓவர் முடிவில் "எதற்காக இவனிடம் கொடுத்தேன்" என்று வெக்டாரியை சிந்திக்க வைக்கிற அளவுக்கு அந்த ஓவரில் வீழ்ந்தது அடி... மூன்று சிச்சர் அடங்கலாக மொத்தம் இருபது ஓட்டங்கள். அந்த ஓவரில் தான் வெற்றி பாங்களூரிடம் இருந்து விலக ஆரம்பித்தது. அப்படியே பத்தொன்பதாவது ஓவரில் மூன்று சிச்சர்களை வாரி வழங்கிய சிறிநாத் அரவிந்த் சென்னையின் வெற்றியை ஓரளவுக்கு உறுதிப்படுத்தினார்.
இறுதி ஓவர்! வேண்டியது பதினொரு ஓட்டங்கள்! வெக்டோரி பந்துவீச்சு!
களத்திலே தாண்டவம் நடக்கும் போது என்ன தான் செய்ய முடியும்! நான்காவது பந்திலே சிக்ஸ்சருடன் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
மோர்க்கல் ஆடியது....... ஆட்டமா அது! என்னா ஒரு அனல் பறக்கும் அடி! மொத்தம் மூறு சிச்சர்களுடன் பத்து பந்தில் இருபத்து எட்டு ரன்கள் ....
இந்த போட்டியிலே ரைனாவுக்கு ஒரு சபாஸ், வழமைக்கு மாறாக நிலைமையை அவதானித்து ஆடிய மிக பொறுப்பான ஆட்டம். சென்னை வெற்றி பெற்றதால ஹோலிக்கு கிடைக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருதையும் தட்டிக்கொண்டார் .
விராட் ஹோலி ஆடிய அந்த அற்புதமான ஆட்டம் விழலுக்கு இறைத்த நீராய் போனதில் சிறு வருத்தமே. எனினும் இதுவரை இடம்பெற்ற 71 போட்டிகளிலே மிக விறுவிறுப்பான போட்டிகள் வரிசையில் இந்த போட்டியையும் சேர்த்துக்கலாம்.
இனி நாளை (25 ) இடம்பெறும் மும்பை கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியோடு சென்னை அணி வரும் 28 ம் திகதி இறுதி போட்டியில் சந்திக்கும். அநேகமாக போன முறை இடம்பெற்ற ipl போலவே இம்முறையும் இறுதி போட்டியில் சென்னை மும்பையை எதிர்கொள்ளும் என்று நினைக்கிறேன். அப்படி வந்தால் சென்னையை பழி வாங்க மிக நல்ல ஒரு சந்தர்ப்பமாக மும்பைக்கு அமையும். இதுவரை இடம்பெற்ற ipl லீக் ஆட்டங்கள் சலிப்படைய செய்திருந்தாலும் இனி வரும் இறுதி மூன்று போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும்.