ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)


உலகையே ஒருகணம் திரும்பி பார்க்க வைத்த, சர்வதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து உலகை காப்பாறிய, உலக வரலாற்றில் என்றுமே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு வீரம் பொருந்திய நகரின் பெயர்... அது தான் ஸ்டாலின் கிராட்!

ஐரோப்பாவிலும், அதை தாண்டியும் உள்ள பலம்பொருந்திய அத்தனை நாடுகளையும் அடித்து நொறுக்கிய சக்திவாய்ந்த பாசிச படைக்கு ஒரு நகரம் சமாதி கட்டியது... அது தான் ஸ்டாலின் கிராட்!

கிட்லரின் போக்குக்கு இறுதி அத்தியாயத்தை தொடக்கி வைத்ததும் இந்த ஸ்டாலின் கிராட் என்ற நகர் தான்.

இரண்டாம் உலக போரினால் இராணுவ, அரசியல் போக்குகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வைத்த தொடக்க புள்ளியும் இதே ஸ்டாலின் கிராட் தான்.. இவ்வாறு இந்த நகரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அணு அணுவாக தமது சொந்த நிலம் பறிபோவதை கண்முன்னே கண்டு பொங்கி எழுந்து எதிர்த்து நின்ற சோவியத் யூனியன் மக்களுக்கு இறுதியில் வாழ்வா சாவா என்ற நிலையை ஸ்டாலின் கிராட் நகரம் ஏற்ப்படுத்திவிட்டது. இந்த நகரையும் கிட்லர் படைகளிடம் இழந்தால் தம் இருப்புக்கும் அதுவே இறுதி நாள் என்பதை அம்மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அப்படியும் அவர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் கிட்லர் படைகளிடம் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைந்தாலும் உயிர் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே?
இவ்வாறு மண்டியிட்டு சரணடைந்து வாழ்வதையோ இல்லை சாவதையோ விட தாம் நேசித்த மண்ணுக்காக, தம் எதிர்கால சந்ததியின் இருப்புக்காக இறுதிவரை சண்டையிட்டு மடிவதையே அம் மக்களும் விரும்பினார்கள்.

அது மட்டும் அல்ல! இந்த ஸ்டாலின் கிராட் நகர் கிட்லரிடம் வீழ்ந்தால், கிட்லரின் அடுத்த இலக்கு பிரித்தானியா தான். அதன் பின் அமெரிக்கா ஆசியா என்று கிட்லரின் கால்கள் ஆழ பதிய கூடிய அச்ச சூழல் இருந்தது. ஆக இந்த முதலாளித்து வல்லரசுகளுக்கு மட்டுமல்லாது, உலகின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் ஒரு யுத்தமாக தான் ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தம் உலகத்தால் பார்க்கப்பட்டது.

மறுபுறம், ஏற்கனவே சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கத்தனமான எதிர் தாக்குதல்களால் ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும், படைகளின் உள பலத்திலும் சற்று குன்றி போய் இருந்த ஜெர்மன் படைகளுக்கும் இந்த ஸ்டாலின் கிராட் வெற்றியானது மிக பாரிய நெஞ்சுரத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆகவே இந்த வெற்றிக்காக கிட்லர் என்ன விலை கொடுக்கவும் துணிந்தார்.

1942 ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி அதிகாலையிலே ஸ்டாலின் கிராட் நகரம் போர்க்கோலம் தரித்து. இம்முறை வழமைக்கு மாறாக சோவியத் யூனியன் படைகளே யுத்தத்தை தொடக்கி வைத்தார்கள். களமுனைகள் திறக்கப்பட்டு பிரமாண்டமான யுத்தம் ஆரம்பித்தது. ஆனால் கிட்லர் படையின் எதிர்பார்ப்புக்கு மாறாக திறக்கப்பட்ட களமுனைகளிலே யுத்தத்தின் போக்கு ஆரம்பத்திலிருந்தே சோவியத் யூனியன் படைகளின் வசமே சாதகமாக சென்று கொண்டிருந்தது. தேசப்பற்று மிக்க சோவியத் மக்களின் முன்னால் ஆயுத பற்று கொண்ட கிட்லர் படைகள் தடுமாறியது. தம் ஒவ்வொரு அடி மண்ணையும் காத்து நிற்க சோவியத் படைகள் காட்டிய எதிர்ப்பால் ஜெர்மன் படை நடுங்கியது.

இதன் ஒரு பகுதியாக 330 000 ஆட்களைகொண்ட ஜெர்மன் படையின் இருபத்திரண்டு டிவிஷன்கள் சோவியத் யூனியன் படைகளால் ஊடறுத்து சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் சுற்றி வளைக்கப்பட்ட படைகளுக்கான ஆயுத வழங்கல்கள் தடைப்பட்டது. இந்த டிவிசன்களை மீட்க ஜெர்மன் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் சோவியத் படைகளால் தவிடு பொடியாக்கப்பட்டது.

சுற்றிவளைக்கப்பட்ட படைகளை சரணடைய சொல்லி கேட்டுகொண்டபோது அப்படைகளின் தளபதி அதை மறுத்துவிட்டான். இதனால் இந்த படைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சோவியத் படைகள் களமிறங்கின. இதன் போது பல இலட்சம் படைகள் கொல்லப்பட்டதுடன், தொண்ணூறு ஆயிரத்துக்கும் மேலான ஜெர்மன் படைகள் கைது செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றவும், எஞ்சிய படைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓட்டம் பிடிக்கவும் ஸ்டாலின் கிராட் நகரம் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இவ் வெற்றியானது சோவியத் மக்களின் நெஞ்சுறுதியையும், இவர்கள் தம் தாய் தேசத்தின் மீது கொண்டிருந்த பற்றையும் உலகுக்கு பறைசாற்றி நின்றது. இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தம் நாடு ஆக்கிரமிக்கப்படுவதற்க்கு எதிராக காட்டிய வீரம் செறிந்த எதிர்ப்பும், தன்னலம் அற்ற உழைப்பின் மூலமே இந்த மகத்தான வெற்றியை பெற முடிந்தது.

ஸ்டாலின் கிராட் வெற்றி செய்தியை இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தம் வெற்றியாக எடுத்து கொண்டாடின. சோவியத் யூனியன் அரசானது ஸ்டாலின் கிராட் நகரை பாதுகாத்து நின்ற தனது படைகளுக்கும், அந் நகரத்துக்கும் ,நகர மக்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஸ்டாலின் கிராட் நகருக்கு "வீரத்திருநகர்" என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது.

ஜெர்மனின் மிகப்பலம் வாய்ந்த டிவிசன்கள் எல்லாம் ஸ்டாலின் கிராட்டில் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த ஜெர்மன் படைகளுக்கும் மிகப்பெரும் கிலியை இத்தோல்வியானது ஏற்ப்படுத்தியது. கிட்லரின் முதுகெலும்பையே உடைத்து போட்ட இத்தோல்வியானது அவரின் பாசிச கூட்டணிகளையும் அடங்க வைத்தது. இங்கே கிட்லர் வாங்கிய அடியானது அவரின் சாவு மணியானதுடன், அவருடமும் அவரின் பாசிச படைகளிடமும் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும், ஜெர்மனும் மீட்க்கப்படும் வரை தொடர்ந்தது.
ஆறு மாதங்களாக நடைபெற்ற ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தமானது இன்று வரை உலகிலே நிகழ்த்த மிகப்பெரும் மரபு வழி யுத்தமாக உலகத்தால் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிப்புக்கும், பாசிசத்துக்கும் எதிராக மனித குலம் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி என்றும் உலகத்தால் நினைவு கொள்ளப்படும்.

-முற்றும்.

12 comments:

  1. வணக்கம் கந்தசாமி!
    ஸ்டாலின் கிராட்டை பற்றி முன்னரே சிறிது அறிந்திருந்தாலும் உங்கள் தொடர் பதிவின் முலம் சிறப்பாக அறிய தந்துள்ளீர்கள். நன்றி!!

    ReplyDelete
  2. நன்றி கந்து.விறிவிறுப்பாய் போன நாவல் ஒன்று முடிந்துவிட்டதே என்றிருக்கு !

    ReplyDelete
  3. அப்படிப்பட்ட ரஷ்யா இன்று சிதறுண்டு போய்விட்டதே?

    ReplyDelete
  4. அருமையான தொடர் .. நன்றி

    ReplyDelete
  5. உங்கள் பார்வைக்கு இன்று ..

    நண்பன் VS வேட்டை

    ReplyDelete
  6. உலக வரலாற்றில் இடம் பெற்ற போர்களில் ஸ்டாலின் கிராட் யுத்தம் பெயர் பெற்றது சோவியத் யூனியன் மக்களின் மன உறுதிக்கு முன் கிட்லரின் படைகள் தோல்வியடைந்தன.
    வரலாற்றில் என்று நினைவு கூறப்படும் சம்பவம் இது.

    உங்கள் தொடர் சிறப்பாக இருந்தது பாராட்டுக்கள் பாஸ்

    ReplyDelete
  7. என்ன ஒன்று இன்று சோவியத் யூனியன் இன்று இல்லை ஆனாலும் சோவியத் யூனியன் என்ற பெயர் என்றும் உலக வரலாறில் அழியாது

    ReplyDelete
  8. வணக்கம் கந்துப் பெரியப்பா;
    நல்லதோர் வரலாற்றுத் தொடரைச் சுவை குன்றாத வண்ணம் அழகு தமிழில் தருகின்றீர்கள்.

    பிரெஞ்சில் இருந்து மொழி பெயர்த்து எழுதுறீங்களா?

    ReplyDelete
  9. மூன்று இலட்சத்திற்கு முப்பதாயிரம் போர் வீரர்களை சோவியத் யூனியன் வீரர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவத்தினை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி ஒரு காலத்தில் ஈழத்தின் இறுதிப் போர் பற்றி ஆய்வு செய்தவர்கள் எல்லோரும் ஒப்பீட்டு அரசியல் செய்திருந்தார்கள்..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    வன்னியிலும் சிங்களப் படைகளுக்கு ஸ்டாலின் கிராட் நிலமை ஏற்படும் என்று எழுதும் புலம் பெயர் ஆய்வுகளை கேட்கும் போது, வானொலியில் வாசிக்கும் போது ரொம்பவே சீப்பு சீப்பா எமக்கு வந்திச்சப்பா/

    ReplyDelete
  10. இந்த மரபு வழி யுத்தம் போல
    எமக்கும் ஆனந்தபுரம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
    ஆனால் உள்ளிருந்து ஊடுருவிய நரிகளால் எம் நிலை தலை கீழாக மாறிவிட்டது.

    அருமையான வரலாற்றுத் தொடரை இலகு தமிழ்மொழி நடையில் தந்த உங்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் பெரியப்பா.

    ReplyDelete
  11. ///பிரெஞ்சில் இருந்து மொழி பெயர்த்து எழுதுறீங்களா?// நமக்கு பிரஞ்சு மொழி எல்லாம் தெரியாதுப்பா! ஸ்டாலின் கிராட் பற்றி அறிந்த பிற்பாடு எழுதவேணும் என்ற ஆவல்.. அது தான்.

    ReplyDelete
  12. கந்து நான் ரசித்துப் படித்த தொடர்களில் ஒன்று... மிக்க நன்றி... இதில் என்னை மிகவும் கவர்ந்தது இதை முடிந்தளவு சுருக்கமாகவும் முழு விடயத்தை உள்ளடக்கியும் தந்தமையே...

    மீண்டும் ஒரு நன்றிகள்..

    ReplyDelete